சனி, பிப்ரவரி 05, 2022

வாழ்ந்தா....

 மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும்

பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும்

ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும்
காக்காய்ப்பொன் சரிகைப் பாவாடைகளையும்
சந்தனக்காப்பையும்
பார்த்துக்கொண்டே இருக்கிறாள்

சாலைக்கு அந்தப்பக்க சிறுமாட அங்காளி

கரிந்து அணையும் தன்
ஒற்றை விளக்கில் எண்ணெய் விட இனி அடுத்த செவ்வாயாக வேண்டும்
என்ற அங்கலாய்ப்பு ஓடுகிறது ஒருபக்கம்

வரப்பிரசாதியாகி விடவும் வரம் வேண்டும்

வழக்கொழிந்த ப்ரியம்

 உனக்கானவர்கள்

உனக்குப் பிடித்தவர்கள்
உன்னைப் பிடித்தவர்கள்
அடையாளம் காண்பதெற்கென்று
நுட்பங்கள் வந்துவிட்டன
முகக்குறிப்பு
சொல்
கைகுலுக்கல் தோளணைப்பு
முதுகோடு இறுக்கிக்கொள்ளல்
குறுஞ்சிரிப்பு
செல்லத்தட்டல்
ஆதுரத்தின் அத்தனை அடையாளங்களும்
வழக்கொழிந்து விட்டனவா
கிளிக்கூண்டின் முன் இறைத்த நெல்மணிகள் போல்
காப்பி பேஸ்ட் காத்திருக்கிறது
பின்வாங்காதே
நிராகரிப்பதன் மூலம் இழந்துவிடுவாய்
பின்வாங்கவே விழைகிறேன்
எனக்கு வேண்டியவர்களை
என்னை வேண்டியவர்களை
கண்டுகொள்ள இந்த சூத்திரம் பிடிக்கவில்லை

இப்படியாகத்தானே


எங்கள் பூசல் நிறைவுற்றது என்று
மயிலிறகு சொற்களால்
வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் இருவர்
கம்பிக்கதவுக்கு வெளியே
உற்றுநோக்கியபடி இருக்கும் காகம்
க்கா என்று குரல் கொடுத்துப் பார்க்கிறது
மயிலிறகுச் சொற்கள்
தலைதிருப்பி ஒரு மந்தகாசப் புன்னகை வீசி அமர
ஆஹா, திரிபுரசுந்தரி
ரௌத்திரத்தை
இப்படி ஒரு உருண்டைச் சோறாக்கிக்
கொடுத்து விடேன் எனக்கும்
அந்தக் காகத்துக்கும்
நாலு பருக்கை போட்டுப் பசியாறிக் கொள்கிறேன்
இரையாத மனசு
இரந்தபடி நாட்கள்

யானை கட்டும் சணல் துண்டு

      அதீதங்களின் மின்னல் வெட்டுக்குள்

முகம் பார்த்துக்கொண்டு

அதீதங்களின் தூறலுக்குள்

நாவை நனைத்துக்கொண்டு

அதீதங்களின் சிறு 'விஷ்க்' வீசலுக்குள்
தலை உதறிக்கொண்டு
சமாளிக்கிறேன்
ஆனால் அதீதங்களை
வாழ்வில் ஒருமுறை மட்டும்தான் காட்டுவாயா
*************************************
ஊருக்குள் நுழையுமுன் அவசர அவசரமாகக் கழுவி விட்டிருக்கிறது மழை
மரங்களும் கூரைகளும்
சொட்டிச்சொட்டி ஜாடையாக சொன்னதை
சிலிர்த்துக்கொண்டு ஒப்புக்கொள்கிறது பசு

பெய்யும்போது நனைந்தால்தானா **************************************
மடித்து மடித்து
அடுக்கி அடுக்கி
அதற்கொன்றும் குறைச்சலில்லை
சரிந்து விழாதபடி
எடுக்கத்தான் தெரியவேயில்லை ************************************
ஆன வயசுக்கு...
நைந்த சணல் துண்டு
இதை வைத்துக்கொண்டு
எத்தனை யானைகளைக் கட்டியாகிறது

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா

 

எப்போதும் சிரித்த முகம்
தெத்துப் பற்களாலும் உங்களுக்கு அப்படித் தோன்றலாம்
சுப்பு அக்காவுக்குப் பாடலை முணுமுணுக்காமல் 
வேலைசெய்ய வராது

சுசீலாவா ஜானகியா சித்ராவா என்றுமட்டுமல்ல
டியெம்மெஸ்ஸா
யேசுதாஸா பாலுவா வாசுவா என்றுகூட பேதமில்லை அவளுக்கு

அடுப்பு மெழுகும் அதிகாலையில் கூட
 ஒரு சாமி பாட்டு பாடுதா பாரு எரும...
காதில் வாங்காமல் தொடருவாள் சுப்பு
' அடி தேவி உந்தன் தோழி'

நள்ளிரவிலேயே இசைத்தட்டை அடுக்கிவைத்துவிடுவாளோ மனதில்

' என்னடா பொல்லாத வாழ்க்கை....
' காற்றில் எந்தன் கீதம்'
அவளே நாயகி
அவளே தோழி
அவளே தத்துவம்
அவளே கொஞ்சல்

ருருரூ...ரூரூரூ... என்று ஆரம்பித்தபோது
அம்மாவுக்கு அழுகை பொத்துக்கொண்டு வருகிறது
இருந்து வாழ வக்கில்ல இங்க வந்து பாட்டு....
ஆங்காரமாய்
குட்டுவைத்த ஒரு கணம் நிறுத்திவிட்டு
மறுகணம் துணியை உதறியபடி தொடர்கிறாள்
' இந்தக்கடல் பல கங்கைநதி வந்து சொந்தம் கொண்டாடும் இடம்'

பித்தமா
பித்தம் தெளிய மருந்தா
அம்மாவைப்போலவே
அவளுக்கும் தெரியாது


சிற்றோவியம்

 

நீலநிற மெழுகு பென்சிலோடு வருகிறாள் பாப்பு
குட்டிக்கையை அசைத்து அசைத்துத் தீற்ற
அட வானம் இதுதானா
ஒரு மிட்டாயைச் சப்பியதும்
சக்தி பிறந்து விட்டது
இம்முறை குட்டிக்கை கடலைக் கொண்டுவந்து விட்டது.
நட்சத்திரத்துக்கு
மஞ்சள் பென்சிலால்
பொட்டு வைத்தாச்சு
மினுங்குதாம்
கைவலித்த நேரத்தில் பச்சைமெழுகு எடுத்து
கன்னாபின்னாவென்று தீற்றிவிட்டு சொன்னாள்
காற்று வேகமாம்
ஆடும்போது மரம் அப்பிடிதான் இருக்குமாம்
நோட்டுப்புத்தகத்தின் பக்கங்களுக்குள்
பிரபஞ்சம் குடியேறியது
இப்படித்தான்
வீடு வரைவதுதான் கஷ்டமாம்
கோடுகோடாப் போட வேண்டியிருக்கு
அலுத்தபடி
மூக்கை உறிஞ்சிக்கொண்டாள்
பாப்புக்குட்டி
ஆமாமா என்றாள் அம்மா

ஒற்றைப்பொட்டு மினுக்கம் காட்டும் காலத்தின் திரி

 குளம் பருகுகிறது

சூரியனை
கரையோரப் புங்கையை,கிளுவையை
குறுக்கே பறக்கும் காகத்தை
மீண்டுவந்த சந்திரனை....
பாசிப்பச்சைக்குள்ளிருந்து
தலைநீட்டிய அல்லிக்குதான்
ஒருநாளே தாளவில்லை

*************************************
உனக்காகத்தான்
உனக்காகத்தான்
என்கிறாய்
என் மனசோ அனிச்சையாய் நீ கிள்ளும்
குரோட்டன் இலைகளோடு
நுணுங்கி நுணுங்கி விழுகிறது
**************************************
இத்தனை இருளுக்கு
ஒற்றைப்பொட்டு மினுக்கம் போதுமென்றிருந்தது
மினுக்கம் வந்தவுடன்
சற்றே தூண்டிவிட மாட்டோமா என்றிருக்கிறது
காலத்தின் திரியோ அரூபம்


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...