வெள்ளி, செப்டம்பர் 30, 2011

வசவுக் கணை 

உத்தரத்திலேயே 
தொங்கிக் கிடக்கும் 
எனக்கு இன்னும் 
நான்கு நாளில்
விடுதலை கிடைக்கலாம்..


என்னை
வீசியவனுக்கும்
தன்மேல் விழாமல்
தப்பித்தவனுக்கும்
பாகப்பிரிவினை ...

தன்மேல் நான் விழாதபடி
நகர்ந்து கொண்டேயிருந்த
இருவருக்கும்
நான்தான்
நடத்திவைத்தேன்!
உள்ளே - வெளியே

கொடியில் தொங்கும்
சேலையின்
எம்பிராய்டரிபூவில்
சுடிதார் நாடாவில்
சட்டையிலாது
அலையும் ஹாங்கரில் ....
கட்டில்,அலமாரி
இடுக்கில்...அடியில்....


எங்காவது இருக்கலாம்

கண்ணாடியின்
பின்புறம் சாய்ந்தோ
துணிகளிடையே   
 படுத்துக்கொண்டோ 
இருக்கலாம் ....
மின்விசிறி 
இறக்கைகளோடு  சுழலாம் ...

குளிர்சாதனப் பெட்டியின்
மேல்கூட காத்திருக்கலாம்...

தைல வாடை
பிடிக்காது வெளியேறிய
கால்வலி....
நேற்று -இன்று-நாளை!


குழந்தைப் பார்வையில்
கவிதைகள்
எழுதேன்..

நண்பரின் ஆலோசனை!
எழுதலாம்தான்!

ஆனால்.......


உணர முடியவில்லை....
குழந்தைகள்
வெளியேறிவிட்டார்கள்

வீட்டிலிருந்தும்....
......மனதிலிருந்தும்...



மீண்டும்
வரும் பருவந்தானே...
நண்பரின் ஆறுதல்!

ஒருவேளை
அப்போது
கவிதை வெளியேறியிருக்கலாம்!

ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

மின்அணு  தகனம் .


துக்கத்துக்கு 
உகந்த நேரமாய் 
இதுதான் இருக்கிறது ...


அவர் குடும்பத்துக்கு 
ஆறுதல் சொல்லும் 
சுமையின்றி 
சடங்கு சம்பிரதாய 
சர்ச்சைகளில் 
தலையிடுவதா வேண்டாமா 
தடுமாற்றம் இன்றி 

துக்கம் கேட்க 
அருகிருந்து 
வருவோர்க்கு வழிவிட 
நகர்ந்து நகர்ந்து ....
சொல்லாமல் 
வெளியேறும்வரை 
அலைபேசி அமைதிப்படுத்தி ....


வெளிப்படுத்தா துக்கம் ....
இனி மின்ன வாய்ப்பில்லா
அந்த அலைபேசிஎண்ணிலிருந்து
விம்மி வழிந்தது....!


நடுங்கும் விரல்நுனி
நீள்கிறது
அழி _கட்டளையிட

சனி, செப்டம்பர் 24, 2011

 வாழ்க்கையெனும் வட்டம்

வருடங்களைத்

தாண்டும் முயற்சி ...

தாத்தா
T-ஷர்ட்டில்

பேரன்
ஜிப்பாவில் ...


புதன், செப்டம்பர் 21, 2011

வாழ்க்கைக்கல்வி


ஓட்டைக் குடிசைக்குள்
சாரல்
ஒழுகும்இடம் அறியாது
மழைக்குத் தயாராகிறது
மனசு...

ஒதுங்காமல்
ஒடுங்காமல்
ஒழுகலுக் கெல்லாம் 
ஒழுகாத பாத்திரம் 
ஏந்துவதும் ...
ஊசிக்குளிர்
உறுத்தாதது போல்
உள்ளேவிட
கப்பல் மடிப்பதும் ........
அட....
வாழக்கற்றாய் ...!
வாழிய ...வாழிய ...! 
மலர்கள் எங்கிருப்பினும் ...

சவ ஊர்வலத்தின்
முன்னே
மாலை சுமந்த வாகனம் !

சிறகடித்தபடி
முன்னேறும்
சில வண்ணத்துப்பூச்சிகள்

கொள்ளிச்சட்டி
பிடித்தவனுக்கு
கூடுதல் கவலை...

சுடுமோ ...படுமோ...
வண்ணத்துப்பூச்சிகளோ
மயானம்வரை
மரணத்தை
முன்மொழிவதுபோல் ....
நீரின் கீழே ...


கல்
போட்டு
கல்
போட்டு
          நீர் பருகும் காகம்
கல் போட்ட
ஜாடியின்
கனம் அறிவதில்லை !   
மழையும் குளிரும்...!


வார்த்தைச்சீதளம்
வருத்தும்போது
மௌனக்கம்பளி
இதம்...
மௌனக்கம்பளி
உருத்தும்போது  ....
சொல் விசிறி
பதம்...!
 
 
பருவக்காற்று
திசையின் உதவியால்
மழையைத் தீர்மானிக்கிறதா?
மன இருளில்
திசையே தெரிவதில்லை...
திசைகாட்டி ?
 
 
குளிரக் குளிர
பூமி
நனைக்கும் மழை
திசை தப்பி
ஆதவச்சூடு
அவிக்கப்பெய்து
 
ஆவி பறக்கிறது!

வெள்ளி, செப்டம்பர் 16, 2011

மயிலேறும் பெருமாள் 

உதைத்து முறுக்கி 
ஊர்வலம் போக 
அரைலட்சம் வைக்காதவன் 
சிவனுமில்லை!
சீவனுமில்லை!
பொய் (நெய் )


உனக்கொரு வாய்
பூனைக்கொரு வாய்
ஒப்பந்தப்படி
உணவுநேரம் ...
இரண்டு கிண்ணங்களோடு
நான் தயார் ...
நெய் சேர்த்து ஒன்று ...
பொய் சேர்த்து ஒன்று..
தவிக்கும் புத்தர்!

தியானம் தவிர்த்து
கைகள் விரித்து
தொந்தி வளர்த்து
அகலச்சிரித்து ...
உன்
ஆசை
என் துன்பம் !
தங்க வேட்டை !

நெற்றிச்சுட்டி
...........................
தோடு ..ஜிமிக்கி ...
மாட்டல் ....,
சங்கிலி ,நெக்லஸ் ...
...........................
.........................
..........................
வளையல் ..மோதிரம் ,
..........................
.........................
.........................
விளம்பரத்தாளை
வைத்துவிட்டு
எழுந்த  தமிழரசி 
காது .மூக்கின் 
வேப்பங்குச்சி மாற்றினாll   lllllllllllllllllllllll
குறிப்பு!
கோடிட்ட இடங்கள்
அவளுக்குப்பெயர்
தெரியா நகைகள் ....

செவ்வாய், செப்டம்பர் 13, 2011

கால் மாறி ஆடியவன் !

வலி உணர்வது
மனமா..
உடலா..
அடர்த்தியின் அளவு
அவரவர் நேர்விலா
     அணுக்கப்பார்வையிலா
பித்தாய் ,
பேயாய் ...
உருண்டு உருண்டு
   உழன்று திரிந்து
கண்டறியாதன
காண வரவைத்த
"திருப்பாதம்"
திருப்பி ஆடியது
பாண்டியனுக்காகத்தானா?
ஈரமனசு

மனதில் பெருகும் நதி
ஓடும் வழியறியாது
உள்ளேயே
சுழல்கிறது...
தேடிக்கொண்டிருக்கிறோம் ...
தோன்றும்
ஊற்றுக்கண்ணை 
நீயும்...
பாயும் வழியை 
நானும்...!
பரஸ்பரம் 
பாதை அறியாப்
பயணம்...!

சனி, செப்டம்பர் 10, 2011

சாலை அகலமாகிறது...!


கூடுதலாய் 
வாகனம் நிறுத்தலாம் 
அறிவிப்புப்பலகைகள் 
அகலமாகலாம் 
பழவண்டி 
பழையசாமான்
ஜல்லி...மணல்
சகலத்துக்கும் வசதிதான்!
வாகனங்கள்?

வழக்கம்போல
வளைத்து 
நெளித்து... 
நீ மகான் அல்ல...!


ஓரிரு அடுக்கு போதும்
வெங்காயமாயிருந்தால் ...
உரித்து மாளவில்லை 
மனச்சருகை !
பலப்பல் போர்வை 
பளபளப்பில்  
அழுகல் வாடை
உன்னுடையதா ....
என்னுடையதா..

எனதல்ல
தோள்குலுக்கல்
கூட்டம் தரும் சலுகை!

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...