சனி, பிப்ரவரி 25, 2012

உறை(டை)ந்த (ஸ்)வரம்

பழைய கொடிக்கம்பி
எனத்தான் கடந்தேன்..
மின்னிய நிறமும்
மெல்லிய தொற்றமுமாய்
அது
நிழலாகத் தொடர்ந்தது..
நிற்க..இருக்க..கிடக்க..
பார்வையில் படும்படி
கவனமாய் இம்சித்தது...
                                               விரல் நுனியை அழைத்துக்
                  கொண்டே ...
              ஏதோ ஒரு
                            வீணையிலிருந்து 
                               இறங்கிய தந்தியா? 
             வயலின்..?
                       தம்புரா...?           
                                       இன்னும் பெயரறியாக்
                      கருவிகளோடு
                                         பாடல் நாயக/நாயகியர்
                                    தோன்றி மறைய.......
திகைத்து நிற்கிறேன்...
அடையாளம் புரியாச்
சங்கடம் உணராது
என்
கைதொடும் தூரத்தில்
காத்திருக்கிறது அது...


             

நனவில் தொலைந்தவள்

நேற்றைய நகர்வலத்தின்போது
அவளைக் கண்டேன் ..
அங்காடி மாடியிலிருந்து
அவள் முகம் தெரிந்தது ..
நீள்வகிடு
நெடுங்கோடாய்
நாசிநுனியில் நிறையும் முகம்!
அவள்..அவள்..
ஏதோ அறிமுகம்..
நகரவேண்டிய எதிர்முகம்
ஏறிட்டுத் தி..ரும்பிய
கணத்தில் ...
நெடுங்கோடு ...கடந்து விட்டது!
உறவா..நட்பா..பகையா..
பிரபலமா..
புகைப்படமா..
எங்கே..எப்படி...
பிடிபடாத விடை
மணலாய் உறுத்திய
உறக்கத்தின் நடுவே
தெளிந்தேன்...
எழுதப்படாத கவிதையின்
மூன்றாவது வரியில்
அவள் இருந்தாள்..!

திங்கள், பிப்ரவரி 20, 2012

கண்டத்தில் நிறுத்தா விஷம்



கடகடவெனக்
குடம் குடமாய்க்
குடித்து...
துரோகம்,மோகம்.
காமம் ,சீற்றம்
ஒடுக்கம்
சகலமும் செரித்து
நீலத்தை
வானிலும் கடலிலும்
பிழிந்துவிட்டு
நடமாடுகிறாள் நீலா!
நீலமாயா...
நீலவாகினி...
நீலயோகினி...
நீலாயதாட்சி...
நீலோத்பலா...

இளமஞ்சள் சுடிதாரில்
பச்சைப் புடவையில்
ஏதேனும் ஒரு
சீருடையில்
இருசக்கர வாகனத்திலோ
பேருந்திலோ
நடைபாதையிலோ
பார்க்க முடிந்தவர்க்கும்
பக்கத்திலுள்ள நீலா
தெரியமாட்டாள்...

ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

வரமளிக்க காத்திருக்கும் தெய்வம்



இருள் கவிந்த இதயத்தில்
ஒளி
பரவக்காத்திருக்கிறது
ஜன்னல் சதுரம்...
பால்கனியின் கொடித்துணி .....
எதையும்
தாண்டிவரத் தயாராக ,
உன் கண் திறக்கக்
காத்திருக்கிறது!
ஒருவேளை நேரடியாக
'வெளி '- யின்
தரிசனம் தேடி
வெளியே வந்தால்
நேர்க்கோட்டு மின்னலாக
ஊடறுத்துப் பாயவும்
தயார்...
எழப் பிரியப்படாத
பூனையின் பசியோடு
இதயத்தை
தட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறாய்
எனத் தெரியாது காத்திருக்கும்
அது
நீ சோம்பல் முறிக்கையில்
தேநீர் அருந்தப் போய்விடலாம் . 

சனி, பிப்ரவரி 18, 2012

பாலையின் அரும்பு

மருதாணிப்பூ
மணந்துகொண்டிருந்த பாதை
இன்று
வெறும் வெளிச்சம்
இறைந்து கிடக்க
வெம்மையின்
சுடுமணத்தைப்
பரப்பிக் கொண்டிருக்கிறது...
மெல்லடி வைத்துப்
பாடல் முனகியவண்ணம்
கடக்கவியலாதபடி !
கடும் முயற்சியில்
வரிகளை
நினைவில் இருத்துகிறேன்..
மருதாணிப்பூ
இல்லாவிடிலும்,
நாளை
ஒரு
சிறுமலர் -
அங்கே சிரிக்கலாம்...  

செவ்வாய், பிப்ரவரி 14, 2012

ஒளிவட்டம்

கடவுள்
வந்திருக்கிறார்
என்றான் தோழன் ....
அவரோடு பேச்சுவார்த்தை
உண்டு என்பான்..!
உன் அருகில்தான்
இருந்திருக்க வேண்டும்
பிரத்யேக நறுமணம்
உன் ஆடைகளிலும்
சிறிது படிந்திருக்கிறது...
"கடவுச்சீட்டு வாங்க
அல்லவா போயிருந்தேன்"
"மறந்து போனாயா
அவர் -சர்வ வியாபி"
நிஜத்தில்
பதற்றம் தொற்றியது
யாரது...
செய்தித்தாளும் அரைத்தூக்கமுமாக
முனனால் நின்றவரோ...
ஒற்றைக்கால்
மாற்றி மாற்றி மடித்து
சாய்ந்து பேசிக்கொண்டே இருந்தவரா...
சகலரும் பார்க்க
கையூட்டு அளித்தவனை
முனனால் அழைத்தவரா ?
குமுறிப் பொங்கியவர்...?
சலனமின்றி புகார் கேட்ட அதிகாரி...?
ஏதும் அடையாளம் முன்பே
சொல்லக் கூடாதா -கடிந்தேன்...
"பரவாயில்லை
உன்னில் கூடத்தான்
படிந்துவிட்டாரே ....
பிறகு பார்க்கலாம் "
என்றபடி விரைந்துவிட்டான்...
பார்க்கலாம்
என்றது...என்னையா...?
    

புதன், பிப்ரவரி 08, 2012

எறும்பு பகிரும் வெல்லக்கட்டி

                                  தீவிர வாசகி என சொல்லிக்கொள்ள முடியாத என்னைப்பார்த்து ஒரு தொடர் சங்கிலியின் கண்ணியைத்தந்துவிட்டார் கீதமஞ்சரியின் கீதா.
சிலர் கவனம் ஈர்த்துவிட்டோம் என்பது மகிழ்ச்சிதான் என்றாலும் ,
கவனமாக சுடர் காக்க வேண்டிய பொறுப்பு திடீரென வந்து மனத்தைக் 
குடைகிறது .!
             நாமே வைத்துக் கொண்டுவிட்டால் எப்படி ....ஒன்றை ஐந்தாக்கி
அடையாளம் காட்டி வணங்க வேண்டிய பொறுப்பு வேறு..!
             அம்மா வெளியில் போக ,வீட்டுப் பொறுப்பைப்பார்க்கும் 
பதின்வயதுச் சிறுமி போல் உணர்ந்தேன் .கொஞ்சம் பெருமை...கொஞ்சம் 
பதட்டம்...
                      பிடித்த பதிவர் சிலரை இந்த இருநூறு என்ற எல்லைக்கோடு 
தவிர்க்கவைத்தது.அதே கோடுதான் பெருந்தலைகளை சேர்க்கும் 
வாய்ப்பையும்  தந்தது. 








                    பிடித்த வலைப்பூக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் லீப்ச்ட்டர்
விருதினைப் பெற்ற மகிழ்வோடு  வழங்கி மகிழ்கிறேன்!
               
               பாரதி கிருஷ்ணகுமாரின் உண்மை புதிதன்று -
   எலி சிங்கத்துக்கு மகுடம் சூட்ட முனைவதுபோல் இருக்கிறதா?...
இருக்கட்டுமே....வலைப்பூவின் உறுப்பினர் எண்ணிக்கையால்
எலிக்கு யோகம்..!

                  சுந்தர்ஜி -பரிவின் இசை
இவருக்கு இரண்டு அப்பம் தரவேண்டும்.கைகள் அள்ளிய நீர் ,பரிவின் இசை -இரண்டுமே என் மனங்கவர்ந்தவை.படித்துத் தெரிந்து கொள்ளவும் முடியும்.படித்து உணர்ந்து கொள்ளவும் முடியும்...
                               

                ஹ ர  ணி -ஹரணிபக்கங்கள் 
கையளவு கற்க ஆசை ,கடுகளவு கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன் 
என்று ஒரு வரியைப் போட்டு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர்!
இவர்கள் கற்றது கடுகென்றால்... நீ நீ நீ ?  என அன்றாடம் மணி
அடிக்கிறது!

           ப.தியாகு-வானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை
என் பெயர் இது எனத் தோன்ற வைத்தது வலைப்பூவின் பெயரே...போதிமரம்
என்றொரு கவிதை நான் போகவேண்டிய தூரம் சொன்னது .
       
          குமரி.எஸ்.நீலகண்டன்-நீலகண்டனின் எழுத்துக்கள்
என் துறை சார்ந்த முன்னோடி.எழுதுகிறார் என்பது தெரியுமே தவிர
எழுத்தினைப்  பதிவுலகம் வந்தபிதான் அறிந்தேன்...
நிலாக்கவிதைகளின் ரசிகையானேன் ...
                         அம்மா ஒரு வெல்லக்கட்டி வைத்துப்போனாள்
                        எறும்பு குழந்தைகளுக்குப்  பங்கிட்டது..
                           குழந்தைகள் சுவைப்பார்கள்....
                              அம்மாவும் கூட
                             காத்திருக்கிறது சிற்றெறும்பு....  ..                




 
                              
   

செவ்வாய், பிப்ரவரி 07, 2012

அபி உலகம்-4

அபி குளிக்கவில்லை
இன்னும்...
அப்பா சொன்ன ஆறு 
...
வேண்டுமாம் !
அடுக்ககத்தின் 
ஆறாம் தளத்தில் 
நாலுக்கு ஆறு
குளியலறை வாசலில் 
நடக்கிறது போராட்டம்!
**************************************
மின்விசிறிக்கு 
 
நேராய்ப் படுத்ததால் 
சளி பிடிக்குமென்றாள்
அம்மா...
கரடிக்கும் ஒரு குல்லா 
வேண்டுமென 
கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டாள்
அபி ......
தனக்குக் குளிரவில்லை என 
பொம்மைகள் மேல் போர்த்தியபடி !
**************************************
எட்டுமணி ரயிலுக்கு 
சீட்டு வாங்கிய 
அப்பாவைக் கடிகிறாள் அபி 
"ஒம்பது மணிக்குதானே 
ஜோஜோ வரும் 
சொல்லிக்கொள்ளாமல் 
எப்படிக் கிளம்புவது?.....  ,
ஜோஜோ தினம் வரும் 
பூனை.
 

பெயர் துறப்பு விழா

ஒரு சுபயோக ,சுபவேளை 
குறியுங்கள்!
அவமானம்,  அவச்சொல் ,
தவிப்பு, புறக்கணிப்பு,
புலம்பல்,இயலாமை
சகலமும் துறக்க வேண்டும் !
இந்த இப்பிறவியின் 
தடங்கள் துடைத்தெறிய 
தற்கொலையை விட 
சிறந்த வழி!
ஒவ்வொரு எழுத்தாக 
உதிர்ப்பதா, உடைப்பதா,
பிய்ப்பதா 
கசக்கி நெருப்பில் இடுவதா ..
எதுவாயிருப்பினும் 
முகூர்த்தம் முடியுமுன் 
முடித்துவிடவேண்டும்...
பெயரற்று 
உலவி உலகைப் பார்த்தல் 
வாய்க்குமா...?
கிரீடமும் முள்முடியும் 
உனக்கன்று !
உன் பெயர்க்கே....
 

ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

கீதமஞ்சரிக்கு நன்றி

முன்னிரவு,அதிகாலை ஆட்டோ தடதடப்பு ,எப்போது என்றில்லாமல் பூக்கும் கவிதைகளை வலைப்பூவில் இட்டேன்.வருகை தந்து வாழ்த்தி பதிவிட்டு வளர்த்துக்கொண்டிருக்கும்
அன்புள்ளங்களுக்கு இந்த அங்கீகாரம் அர்ப்பணம். குறிப்பாக ராம்கோபால் எஸ் வி வி சார்!மகிழ்வைத் தந்த கீதமஞ்சரி வலைப்பூவின் கீதாவுக்கு நன்றி! 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...