திங்கள், மே 28, 2012

குறுஞ்சிரிப்பு


மே25 வல்லமை மின்னிதழில்

விரைந்து கொண்டிருந்த
வாகனத்தை
ஓரம் நிறுத்தி
அவசரமாக
அலைபேசி எடுத்தான்....
உதடுவிரிந்த புன்னகையொன்றைச்
சிந்தினான்
எதையோ வாசித்து .....
தனித்த புன்னகையின்
கூச்சம் உணர்ந்து
வேகமெடுத்துப் போய்விட்ட
அவனை மகிழ்வித்த
குறுஞ்செய்தி
நண்பனின் கிண்டல்?
காதலியின் பகிர்வு?
ஏதேனும் வெற்றி ?
என் கேள்விக்கு
விடை சொல்லத் தெரியவில்லை
பாதையோரம்
சிந்திக் கிடந்த
அவன் புன்னகைக்கு....

சனி, மே 19, 2012

அவன் பார்க்கக் கூடாத கதவு

மே16 சொல்வனம் மின்னிதழில் 
திறக்கப்போவதில்லை 
என்ற தெளிவின்றிப் 
பூட்டப்பட்ட கதவு அது.

யாரேனும்
முன் வந்தால் -
திறக்கத் தோதாக
நிலையின்மேல் சாவி கூட
இருக்கிறது.
இந்த வளைவுகளையும்
கொண்டிகளையும்
செதுக்கி கோர்த்தவனுக்குத்
தெரியாது,
உரிமையாளனின்
ஆன்மாவை -அதில்
தொங்கவிடப் போவது…
அந்த வளையம் ,
அழுத்தமாகத் தாழிடத்
தோதாக -தன்னை
இழுத்துப் பிடித்துக்கொள்ளும்
விரல்களின்
ஸ்பரிசத்துக்காகவே
காற்றில் அசைந்து அசைந்து
முனகுகிறது.
வீடுமறந்து
அயல்மண்ணில் நிலைகொள்ள
முயலும்
தோழன் கண்ணில்
படாதிருக்கட்டும்
இந்தக் கதவின் படமும்
என் வரிகளும்…..

தேவை தேவதைப் பிறவி



மாங்கல்ய வரம் நாடிக் 
கயிறுகளையும் ,
பிள்ளைப் பேறுவேண்டி 
தொட்டில்களையும் ,
வளையல்களையும்,
முணுமுணுக்கும் உதடுகளோடும் ,
கரையுடையத் துடிக்கும் 
விழிகளோடும் 
கட்டிக் கொண்டிருந்த 
பழக்கத்தில் 
தொங்கவிடுகிறோம்
தேவதை உடைகளை....
இறுக்கம் உடைக்கவும் 
எங்கும் உலவவும் 
வேண்டி 
இந்த வேண்டுதல்!
உற்றுப் பாருங்கள்...... 
உங்கள் வீட்டு 
முருங்கையில் கூட 
ஒன்றிரண்டு தொங்கலாம்.
ஆகிவந்த மரமென்று 
அடுத்தவரும் கட்டலாம்.....

செவ்வாய், மே 15, 2012

நான் பொழிந்த புனல்

மே 14  உயிரோசையில் 

உள்ளங்கை குவித்து
ஏந்தி வந்தேன் 
என் வீட்டுக் கிணற்றுநீர்..
பிரியா விரல்களூடும்
கசிந்த நீர் போக 
மீதம் சொரிந்தேன் 
ஒரு நுரை ததும்பிய 
பேராற்றில் .....
இன்றைய வண்டலில் 
அந்தத் துளிகளைத் தேடித் 
தோண்டிக் கொண்டேயிருக்கிறேன் 
ஒரு ஊற்று....
நானும் புதைந்திருக்கும் 
அதன் மேல் நின்று 
நக அழுக்கு சுட்டி 
சிரிக்கும் 
நீ 
கொண்டிருக்கிறாய் 
புதுப் புனல் நாள் குறித்த 
நம்பிக்கையை...

ஞாயிறு, மே 13, 2012

கறை படிந்த பாய்

 

மே 14  வல்லமையில்

இடுப்பு தரிக்கா காற்சட்டைக்கு 
அரைஞாண் கயிறுக்
காப்பு..
முறுக்குவாளியில்
மட்டுமன்றி 
கடுகுடப்பி சில்லறையிலும் 
வைத்திருப்பாய் என் தீனி...
பால்காசு,
பயிறெடுப்பு...
உன் 
எல்லா வரவிலும் 
என் செலவு...
அழுக்குப் படிந்த 
உன் மஞ்சள் கயிறு 
நினைவிலாடுகிறது 
இந்த அடையாள அட்டையை 
தொங்கவிடும்தோறும்.....
வெடிப்புகளுக்கு இட்ட 
மஞ்சள் விளக்கெண்ணையால் 
கறை படிந்து போன 
உன் பாயைப் பார்ப்பதுண்டு 
அம்மா 
அந்தி வானத்தின் நிறக்கலவையில்...  

அம்மாவும் கைபேசியும்

 

குரலின் பலவீனமும் 
வெடிப்பும் மறைத்து 
கோபம் காட்டவும் ,
யார் யாருக்கோ 
யாருக்கோ யாரோ 
அனுப்பிய 
தத்துவ விள்ளலை 
உன் 
நாவிலும் கரைக்கவும் ,
நற்காலை,நல்லிரவு,
பத்திரம் ....
முகமன்களைப் பகிரவும் 
முடியாவிட்டால் போகிறது ...
பச்சை பொத்தான் 
அழுத்தி,
"ஏம்பா சாப்பிட்டியா..."
என நீ 
தொடங்கும் தோறும் 
அறிவியல் வாழ்கிறது 
அம்மா...!

சனி, மே 12, 2012

பூட்டாத பூட்டுக்கள்


 May 11,வல்லமையில் 

பூட்ட ஏதும் 
பொருளிலாத போதும்
பூட்டிச் செல்வது 
வழக்கத்தின் காரணமாய் 
நிகழ்கிறது.
கதவைத் திறக்கும்போது 
ஞாபகமாய் 
மனசைப் பூட்டிக் கொள்ள 
வேண்டியிருக்கிறது …..
உள் சுவர்களெங்கும் 
பிறர் அறியாப் 
பூட்டுகள் 
தொங்கிக்கொண்டே இருக்கின்றன …..
தேவைக்கேற்ப 
அவரவர் 
எடுத்துக் கொள்வதுண்டு 
சிலசமயம் 
தனக்கு….
சிலசமயம் 
பிறர் வாய்க்கு….
பலசமயம் விஷயங்களுக்கு ….
எப்போதும் கனவுகளுக்கு

 

புதன், மே 09, 2012

நாற்காலிப்பிசின்

மே 8 கீற்று இணையதளத்தில் வெளியானது 
நான்கு கால்களிருப்பதால் 
என் நாற்காலியும் 
உனதும் ஒன்றல்ல.
உன் நாற்காலியின்                                                  
நான்கு கால்களிலிருந்து 
வேர்பரவி 
நாற்றிசையும் வியாபித்திருப்பதை 
உலகறியும்.
கையிலிருந்து 
நழுவும் பாதரசமாய் 
என் நாற்காலியை 
எனக்கு ஒட்டாமல் 
உருட்ட 
உன்னால் முடியும் என்பாய்.
சுட்டுவிரல் நீட்டி 
என்னுடையதன் 
நான்கு காலும் முறித்து 
அந்தரத்தில் -
இருக்கை மட்டும் 
ஆடவைத்து அச்சுறுத்துவாய்...
இருக்கை அடியில் 
முள்ளோ, குண்டோ,
எனப் பூடகமாய்ப் 
பார்வையால் வெருட்டுவாய்...
இருக்கை 
எனக்கு கௌரவமன்று ..
உன்னை நினைத்தே 
என் கவலை...
வேரோடியிருக்கும் 
நாற்காலியின் கால்கள் 
வேறொருவர் கால்களை 
நோக்க நேர்கையில் ,
உன் இருப்பு.....?

செவ்வாய், மே 08, 2012

இருந்தேன்....இருக்கிறேன்....இருப்பேன்...

மே 7 உயிரோசையில் இடம் பெற்றது

வியந்ததும்,ரசித்ததும்,

 கொண்டாடியதும்
நீதான்....

துளிர்பச்சை,அடர்பச்சை,

இலைப்பச்சை என்பாய்....

பழுப்பு படர்கையில்

அசுவாரசியம் மேவ,

சருகு கண்டு

சலிப்பதும் உண்டு...

சூரியன்,ஆடு,புழுதி,

மழை,நிலா.....

எப்போதும்,

நான் இருக்கிறேன்

இலையாக.....

வாழ்வைக் கொண்டாடிக்

கைதட்டும் 
ஒரு தருணம் ,

சருகாகி

உதிர்ந்துவிட்டேன் என்பாய்...

நான் இருக்கிறேன்
இன்னொரு துளிரில்......

திங்கள், மே 07, 2012

பௌர்ணமி எனது நாளல்ல....

தேர்ந்த பாடகியின் 
பழகிய தம்புரா போல் 
பழைய ஜன்னல் 
வளைவு போல்,
புதிய கைப்பிடிச் சுவர் போல் ,
என் 
குட்டித் தலையணை போல்,
பிரபஞ்சப் பயணத்தின்
பிடிமானம் போல் 
பற்றிக்கொள்ளவும் 
சாய்ந்து கொள்ளவும் 
துண்டு நிலாவே 
தோதானது.

சனி, மே 05, 2012

கரிந்த சொல்

மே  2 அதீதம் இதழில் 

மினுக்கி உதிர்ந்த 
நட்சத்திரம் 
கடைசியாய் 
ஏதோ சொல்ல விழைந்தது….
அதற்காக இறங்குகிறது 
என்றே 
காத்திருந்தேன் நெடுநேரம் ….
ஒளித்துகள் 
இலக்கிலா விலக்கில்
வீழ்ந்திருக்கலாம் போலும்!
நிலா மீதான குற்றச்சாட்டோ ,
இடித்துத் தள்ளிய 
இதர நட்சத்திரம் மீதான 
மனத்தாங்கலோ,
என்னருகே 
சோம்பலாய்ச் சுருண்டிருந்த 
பூனைக்கான கேலிச்சொல்லோ…..
நட்சத்ரா …
என்ன சொல்ல விழைந்தாய்?

வெள்ளி, மே 04, 2012

மோகினிச் சொல்

.ஏப்ரல் 30 கீற்று இணைய இதழில் வெளியானது 

ஒரு சுள்ளிக்கட்டு சுமந்து சென்றாய் நீ

சிறியதும், பெரியதும், நீளமும், குட்டையுமாய்
அடக்கி மடக்கிக் கட்டி வைத்திருந்த கட்டுமீறி 
ஒரு சுள்ளி பாதையில் விழுந்து விட்டது.
பின்னால் வந்த ஒருவன் எடுத்துப்பார்த்தான்.
"கோடு போலிருக்கே...."
இன்னொன்றைத் தேடி வைத்து இணை கோடாக்கினான். 
பக்கத்திலிருந்தவன், கேலிச்சித்திரக்காரன் போல்
ஒரு வளையத்தை மேலே வைத்து,
"தலையும்,கையும்" எனச் சிரித்தான்.
கேட்டுக் கொண்டிருந்த மூன்றாமவன்,
தோதான இன்னும் இரு குச்சியால் 
உடல் கொடுக்க, உயிர் கொடுக்க வந்தான் மற்றவன்.
ஆடை ஒருவர் தர,"மூளியாக இருக்காதே" என 
ஆபரணம் சூட்டினாள் ஒருத்தி.
பால் பழத்தோடு ஒவ்வொருவர் போஷாக்கு தர,
லாஹிரி வஸ்துக்களோடு சிலர் சந்தித்ததாகவும் கேள்வி!
மறுநாள் நீ திரும்புகையில் 
ஒற்றைச் சுள்ளி மோகினி அங்கே உலவுவதாகவும் 
சூட்சுமக் கயிற்றின் முனை பிடித்தவாறு 
வழிப்போக்கன் வெகுகாலம் முன்பு கடந்துவிட்டதாகவும் 
கதைத்துக்கொண்டிருந்தார்கள் .....
உன்னிடமும் சொன்னார்கள் "எச்சரிக்கையாக இருக்கும்படி..."

வியாழன், மே 03, 2012

பயண வழியில்.....

  ஏப்ரல்30 உயிரோசையில் வெளியானது

 
ஓடத்தின்
நுனிப்பறவையாகவும்.,

நீர்விழு நிழலாகவும், 

தூரவானின் சாட்சிப் பறவைகளாகவும் ,

தொடாது போகும் மேகமாகவும் ,

தொங்கும்

கூண்டு விளக்காகவும்,

 அதனுள்ளிருக்கும்

 துளி ஒளியாகவும் ,

ஓட வளைவாகவும்,

நீர் கிழிக்கும் துடுப்பாகவும்,

 ஓடா நீல அலையாகவும்,

 எவ்வெப்போதோ

 நான் இருந்திருக்கிறேன்.....

ஓடத்தினுள்
சாய்ந்திருந்த நினைவு மட்டும் இல்லை...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...