1 கேளாமனம்
ஆசைதான்
எல்லோருக்காகவும் பிரார்த்திக்க
கைஎன்னவோ
வழிநடையில் சுவர் தாண்டி
நீட்டிக்கொண்டிருக்கும் செம்பருத்தியை
வீட்டு மாடத்தில் பூசிக்கப்
பறிக்கிறது
2 விலங்கு
ஒரு கேவல்
எழும்பி
வெடித்தால்தான்
என்ன
3 படைப்பாளி
கவிதை எழுதி நீண்ட காலமானது
ஆரஞ்சு நிறத்தில் காரட்
சிறுவேர்சூழ் சிவப்புமுள்ளங்கி
ஓடடைந்த புளி
உருண்டு உதிரும் நெல்லி
மணக்கும் பசிய மல்லி
கழுவி ஆய்ந்து அடுக்கி ..
இதன் ஒரு கீற்றையும்
படைக்க இயலா வெறுமையுடன்
இன்றும் ஏடு மூடவேண்டியதுதான்
***
டிசம்பர் இரண்டாம் இதழ் 2014