புதன், டிசம்பர் 30, 2015

இயல்புநிலை


எல்லாம் சரியாகிவருகிறது
என்ன 
அடுப்பு ஏற்ற வாய்க்கவில்லை
இன்னும் பொட்டலங்கள் வேண்டியிருக்கிறது
கும்பி அடங்க
இன்னும் யாரோ தரும் ஆடைகளில்
மானம் காத்துக் கொள்கிறோம்
கூரை எங்களுடையது போல இல்லை
பள்ளிகளில்
அலறித்தவித்து
வெளியேறிய நேரத்தின் பாதைகள்
சூழ்ந்திருந்த நீர்
எங்கள்
கைரேகைகளையும் அழித்திருப்பதைத் தவிர
எல்லாம் சரியாகி வருகிறது
மழை ,ஆறு,ஏரி,குளம்,தண்ணீர்
இதெல்லாம் கேட்ட மாத்திரம்
நடுங்க வைத்த கெட்ட வார்த்தைகளாக
இருந்தது மாறி
பாரம்பரிய கெட்ட வார்த்தைகளைக்
கண்டுகொள்ள முடிவதால்
இயல்புநிலை
திரும்பித்தான் விட்டது போலும்
வாசலில் குழையும் சொறிநாய்க்கு
ஒருவாய் போட்டால் மட்டுமே
சோறுண்ணும் பழக்கமுள்ள
கைப்பிள்ளைக்குத்தான்
எப்படிப் புரிய வைப்பது
வாசலுமில்லை
நாயுமில்லை
சோறுமில்லை என்ற
இந்த இயல்பு நிலையை

கீற்று இணைய இதழில் 

டிசம்பர் பூக்கள் 2015

எப்போதும்போல்
அழுத்திஅழுத்தி..மீண்டும் மீண்டும்
ஈரத்தைத் துப்புரவாக மிதியடியில்
துடைக்கிறேன்
இதுவும் குற்ற உணர்ச்சி
தருவதாக
இந்நாட்கள் நெருக்குகின்றன    
(மழை வெள்ளத்தில்  சென்னையும் கடலூரும் தத்தளித்த நாட்கள் )
************************************************

ஏகப்பட்ட விளக்கு
இருள் இருக்கிறது இருளாகவே


*****************************

துண்டு போடு
உடை
நொறுக்கு
துளியாவது கிடைத்தால் சரி
******************************************

நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்
கை கழுவிக்கொண்டான்
சாக்கடைத்துளி
உதறினான்
சாக்கடைத்துளி
வாருங்கள்
சுத்தமாகிவிட்டது அவ்விடம்
அவனுக்கு
என்ன வேண்டுமென
நாம்
அமர்ந்து பேசலாம்
****************************************
ஒன்றையே பேச
உலகம் அனுமதிப்பதில்லை
ஒன்றே நிலையான
வாழ்வு
இதில் அடக்கமில்லை
**************************************
புரியாது எனத்தெரியும்
இவ்வளவு....
இப்போதுதான் தெரியும்
*************************************
உயரம் உன் பார்வை
துயரம்
அது வெறும் வானம்
**************************************

வெள்ளி, நவம்பர் 20, 2015

முகநூல் துளிகள் -3



வனத்துக்குள் துரத்து 
இல்லை சுட்டுவிடு 
சில்லறைக்கு மண்டியிடுமுன்
********************************************
தருவதற்கு ஏதுமிலா வெறும்
அகப்பை 
எரியட்டும்
*********************************
ஒரு நிமிடம்தான் 
நீ நீயாக 
பிறகு 
மற்றும் சிலராகிவிடுகிறாய்
***********************************************
உன் நம்பிக்கையைவிடப் 
பெரிய சிலுவையில் 
யார் அறைந்துவிடப்போகிறார்கள்
*******************************************
ஒரு அழிரப்பர் 
எல்லாவற்றுக்கும் கிடைத்தால்
எவ்வளவோ தெளிவாயிருக்கும்
***********************************************
தெளிவாகவோ உக்கிரமாகவோ 
இருக்கவேண்டியிருக்கிறது...
ஆகப்பெரிய சந்தர்ப்பங்களைப் 
புறந்தள்ள வேண்டியிருக்கிறது..
ஆகமோசமான நிமிடங்களைப் பொறுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது
பார்க்கவும் பாராததுபோல் இருக்கவும்
கேளாததுபோல் இருக்கவும் கேட்கவும்
மறந்து தொலையவும்
சுமந்து திரியவும்
கல்மிஷம்தான்
ஒத்துக்கொள்ளவும் பசப்பவும்கூட
சீ
நடுங்காதிரு

முகநூல் துளிகள் -3




பசி ருசியை
ருசி பசியை
பசி பசியை
ருசி ருசியை
எதையாவது எதுவாவது
வென்றுதான் ஆகவேண்டுமா சனியன்
*******************************************************
வேர் வைத்தியமாகும் 
வேருக்கு ?
*****************************************
எல்லாவற்றையும் எப்போதோ 
சொல்லிவிட 
வாய்க்கிறது உனக்கு 
எப்போதும் இல்லை எனக்கு
*********************************************
கொஞ்சம் உப்பு போடு 
பரிச்சயமான பொய்
எப்போதும் சகிக்காது
******************************************
99.9 சதவீத வாய்ப்புகளில் 
நம் சுத்தம்
நம் வாழ்க்கை 
நம் சிறுமை 
0.1எவ்வவ்வ்வளவு பெரிதாயிருக்கிறது

முகநூல் துளிகள் 2

ஆகப்பெரும் சித்ரவதை
அதை
சொல்லாதிருக்கக் கடவது
அதனினும் பெரிது

*********************************************

பொய்மையின் துளிரும்
அதே
செம்மையோடுதான் அசைகிறது
வேண்டுமென்றால் நினைத்துக்கொள்
நாணம் என
********************************************

நிலாவையும்
இடுங்கிய கண்ணோடுதான் பார்க்கிறாய்
பாவம் வெளிச்சத்துக்கு ஒடுங்கியபிழைப்பு

*************************************************

உரசியபடியே 
வீழ்கிறது சருகு 
தளிர் தடவி ஆடுகிறது காற்று
**********************************************

பேசாதிரு
பாற்பற்களைப்போல்
ஆசையாய்ப் புதைக்கமுடியவில்லை
விழும்சொற்களை

முகநூல் துளிகள்

கலைக்கப்பட்ட சீட்டுக்கட்டுபோல்
கிடக்கிறது வாழ்க்கை
அடுக்கிவிடலாம் எனநம்பித்தான்
உட்கார்ந்திருக்கிறோம்
கள்ளத்தனம் கடவுளும் பண்ணுவானோ

********************************************
தோற்றுத்தான் போகிறேன்
இத்தனைமுயற்சிக்குப்பின்
நான்சிந்தும் புன்னகையை
பிரயத்தனமும் பிரக்ஞையும்இன்றி
அன்றாடம் சிந்தி உதிரும் காட்டுப்பூவிடம்
*******************************

நீருக்குள்ளிருந்து எட்டிப்பார்த்த மீன்
சிரித்துக்கொண்டது
தூண்டில்காரன்
நிலவைத் தின்றுகொண்டிருந்தான்
**************************************

வயது எண்
வார்த்தை சொல்
பிரியம் பித்து
வாதை
உன்போல் பொருள் கொள்வது
**************************************

புரிந்துகொள்ள வேண்டியவற்றின் பட்டியல்
நீள்கிறது எனக்கு
கிழித்தெறிந்த அவன் புன்னகை
உட்பட


திங்கள், நவம்பர் 16, 2015

பொறுப்புத்துறப்பு


நிற்காதா மழைஎன்ற கேள்விக்குப்பின்
வேறொன்றும் இல்லை
எங்கள் குடியிருப்புகளின் உள்ளேயும்நீர்
என்பதற்குப்பின் ஏரிகளை,குளங்களைத் தூர்த்த
யாரையும் குறிக்கவில்லை
நான்குநாட்களாக உணவுஇல்லை
என்பதற்கு மழையை அனுபவிக்கும்
அடுப்புப் பற்றவைக்காத எங்கள் சோம்பலே காரணம்
சாலைகள் அரிக்கப்பட்டுவிட்டது
என்ற விஷயம் விழுந்து மூழ்கி
உங்கள் வருமானத்துக்காகவே
கண்டுபிடித்தோம்
தண்ணீர்பாம்புகளையும்
நிறைந்த ஆறுகளையும்
எங்கள் பிள்ளைகள் பார்க்க
இதுபோல் வாய்ப்பு அரிது
அதனால்தான் உயிரையும்கொடுத்துவிடுகிறார்கள்
பிழைத்தவர்கள் நீச்சல் கற்றுக்கொண்டுவிடுகிறார்கள்
ஒருவேளைமழைபெய்து
ஒருவேளைவெள்ளம்வந்தால்
வீடுமூழ்குமே எனயோசியாமல்
சாக்கடைகளின் கரைகளில்
கட்டிக்கொண்டது எங்கள் பிழைதான்
கரைதாண்டிக்கட்டிய எஜமானர்களும்
மிதக்கிறார்கள்
நாளை படகுபிடித்து
நாங்கள் அவர்கள் வீடுகளுக்கும்
அவர்கள் தங்கள் வேலைத்தலங்களுக்கும்
செல்ல
மழைத்தண்ணீர் சூழ்ந்த ரோஸ்வுட்
கட்டில்களின்மேல் அமர்ந்து
பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள்
குளிர்தாங்காத கிழம்கட்டைகளை
நாங்கள் கணப்புகளின் பக்கம்
அமர்த்தியிருக்கவேண்டும்
ஆனால் அந்தஓரத்துச்சுவரும் கூரையும்
தகர்ந்ததால் அது தடைப்பட்டது
பரவாயில்லை
நனைந்த காணாமற்போன
புத்தகங்களைத் தேடும் சிரமம்தராமல்
எம் பிள்ளைகள்
வெள்ளம்கொண்டுசேர்த்த
குப்பை பொறுக்கிப் பிழைத்துக்கொள்வார்கள்
மதியஉணவுக்கென
நீங்கள் ஒதுக்கும்தொகை குறைத்துவிடலாம்
இலவசமாய்க்கொடுக்க
அடுத்தபட்டியல் தயார்தானே

துயரங்களின் பின்வாசல்


மையோ மரகதமோ அய்யோவும்
அதோ அவள்
வயிறெரிந்து கூவுகிறாளே
அந்த அய்யோவும் ஒன்றாகுமா
வீட்டைப்பற்றி நினைவே இல்லாமல்
அப்பன் விழுந்து கிடந்த
சாராயக்கடையிலேயே
தட்டு ஏந்திவருகிறான் ஒருவன்
தம்ளர் பிடிக்கிறான் பிறிதொருவன்
சங்கிலித் தொடர் விளைவு
பற்றிய உங்கள் கோட்பாடுகள்
அங்கே வழிந்து கிடக்கிறது
எவனோ எடுத்த வாந்தியாக
முன்பெல்லாம்
விரைவில் அல்லது எப்போதாவது
எல்லாம் மாறிவிடும்
என்று தோன்றிக் கொண்டிருந்தது
சமீபமாக
எதுவும் தோன்றுமளவு
பொழுது புலர்வதேயில்லை
பாதையோரம் போகும் சிறுமியின்
கைப்பண்டத்துக்கு விளையாட்டாய்
கையேந்துபவனைப் பார்த்து
விரட்டுகிறாள்
அறிவில்ல..பச்சப்புள்ள பண்டத்தப்
பங்கு கேக்குறியே ....
பக்கத்துப் பெட்டிக்கடையில்
நாளிதழின் போஸ்டர்
ஆடுகிறது
டாஸ்மாக் இலக்கு செய்தியோடு

உங்கள் உலகம்

நாட்டு நடப்பு பேசுவீர்களா
வீட்டு நடப்பு வெளிநடப்பா
என்னதான் இருக்கும்
மாலை மங்குமுன் தொடங்கி
இருளை அலட்சியம் செய்து
இடையில் தேநீர்க்கடைவரை சென்றுமீண்டு
மதகடிச் சுவர் அதிரஅதிரச்சிரித்து
மனமின்றி
ஒருக்களித்து நிற்கும் சைக்கிள்களை
உருட்டியபடியும் பேசிப்பேசித்
தீராக்கதைகளோடு
கூடிப்பிரியும்
ஆண்களின் உலகம்
ஆச்சர்யம்,எரிச்சல்,ஏக்கம்
ஏன் பொறாமைகூடத்தான்
எங்கள்காலம் அது
இப்போதெல்லாம் முகநூலில் கூடி
முன்பின்னாய்ப் பேசி
எல்லோரும் சமமென்றே உறுதியாச்சு
ஆனாலும்
ஒற்றைக்கொரு நிமிடம்
எவராவது சொல்லிவிடுகிறீர்கள்
ஏதோவொரு
சாராயப்புட்டியின் பெயரை
விருப்பக்குறியிடும் விரலைஇழுத்துக்கொண்டு
பார்க்காததுபோல்
கடக்கிறோம்
உங்கள் உற்சாக எதிரொலிகளை
உங்கள் உலகம்
இன்றும் தனிதான்
என்ன
எட்டி நின்று பார்த்துச்செல்லலாம்
உரையாடலின் இடம் உங்களுக்கானது
வெளி உங்களுக்கானது

ஞாயிறு, நவம்பர் 08, 2015

குடை என்ற குறியீடு

மழை என்னை விரி என்றது
இருள் என்னை விளி என்றது
நான் முந்தி
நீ முந்தி
ஒரு துயரப்பாடலை
இடை நிறுத்திவிட்டு திடீரென
பெருங்குரலெடுக்கிறது காற்று
முகம் தெரியாதிருப்பதை எண்ணி
சிலிர்த்துக் கொள்கிறது
வேலியோரச் சிறுகொடி
பற்றிக்கொள்ளாமல் விட்டுவிட்ட
குடை
ஆனந்தமாகத் தாவிவட்டமிட்டு
தலைகீழாக மிதக்கிறது
அந்தக்குடைக்குவண்ணமில்லை
மின்னல் அது குடைஎனச் சொல்லியது
அவ்வளவே
உரிமைகோராசுதந்திரத்தின் கீற்று
அத்துணைஅழகாய்இருந்தது
யாரும்எனதென்று
சொல்லிவிடும்முன் நகர்ந்துவிடல்நலம்
நானோ
குடையோ

நினைவ(வி)லை

அந்த நொடியில்
உன்கண் எப்படிஒளிர்ந்திருந்தது
ஒருவிரல் உயர்த்தி
நீ சுட்டிநின்ற காட்சி
அதன் ஒயில்
கடல்பச்சையும் நீலமுமான உன்ஆடை
காற்றில் உயர்ந்துஅலைந்தஅதன்பிரி
சரிகையோ எனத் தோன்றவைத்த
ஒளியின் இழை

உன்இதழில் இருந்த புன்னகை
அன்பின்மிச்சமா
என்பதைத்தவிர
மற்றஎல்லாம் நன்றாகவேநினைவிருக்கிறது

அந்தப்புன்னகை நினைவில்லை
என்றாசொன்னேன்
இல்லையில்லை
புரியவில்லை

திங்கள், நவம்பர் 02, 2015

எரிகிறது எம் வயிறு

கர்ப்பப் புளிப்பெனக் கேட்கையில்
கசியக் கற்றுக்கொள்ளா
கல்லானவன்
கருவின் சுமையழுத்த
இரங்கா நீரால்
சுரக்கும் பாதகனம் பார்க்காதவன்
முதல் வீறலின் தேவகானம்
கேட்காதவன்
குப்புற விழுந்து தலைதூக்கிப்
பார்க்கும் பார்வையில் சொக்காதவன்
ஆயுளில்
ஒரு மழலைத் தீண்டல் பெறாதவன்

இவனெல்லாம் கூட
ஒரு தீச்சுடர்
தொடமாட்டான்
குழந்தையிருக்கும் கூடு கொளுத்த

எங்கிருந்து வந்தீர்கள்
ஒரு தாயின்
கர்ப்பத்திலிருந்து என்று மட்டும்
சொல்லாதீர்கள்
அழுக்குத் திரள்களே

பரிதாபாத் பாதகத்தின் பின்  எழுதப்பட்டது

வளைவு அழகல்ல

தன்மேல் ஏறியிறங்கி விளையாடி
பக்கத்து வாய்க்காலில் நழுவி விழுவது
சாரையா கட்டுவிரியனா

அரைஅடி தள்ளி நிற்கும்
எருக்கு ஏன்கிளையை
இடிப்பதுபோல் நீட்டிக் கொண்டு
பூக்கிறது

கண்ணுக்கெட்டிய தூரம்
படர்ந்து  கிடக்கும் அருகு
இந்த வேர் ஓரத்தை
விட்டு வைத்தால்தான் என்ன

எப்படியும் வெட்டத்தான் போகிறார்கள்
இந்தப்பக்கத்து வாரிசு
இடிக்காமல் மட்டையைப்
பதவிசாக விரித்தால் நல்லதாச்சே

ஒரு புகாரும் கேள்வியும்
இல்லாமல்
வளைவும் சொகுசாக நிற்கும்
பனை ஏதாவது சொல்ல வருகிறதா

மன்னிக்கவும்
அதை நீங்களே கேளுங்கள்


கடந்தகாலக் கதாநாயகி


வந்தாரை வாழவைப்போம்
என
புன்னகையாக ,ஈர்க்கும் பார்வையாக
காந்தக்குரலாக,கொடி இடையினளாக
நாட்டிய நடையாக,
நளின சுந்தரியாக
தெறிக்கும் செந்நிறத்தவளாக
கூர்மூக்கினளாக
அங்கச் செழிப்பினளாக
அடையாளங்களைக் கொண்டு
ஆதரித்த உலகில்
வயதின் அடையாளங்கள்
வாழ்வை மாற்றிவிட
எவரையும் எவரும் அழைக்கக் கூடும்
நகைச்சுவை என்ற பெயரில்
நாறும் சொற்களால்

கலை என்றும் நிலை என்றும்
குழம்பாது
மொழியறியாப் பெண்ணே
அப்படியே கடந்து போ

கமல்ஹாசன் சொல்லாத தீபாவளி




ஈர அரிசி  இடிக்கும் கைப்பாறை,
முறுக்கு உரல் ,பெரிய வாணலி
பூந்திக்கரண்டி ,சல்லடை
இரவல் சுற்றுக்குத் திட்டமிடல்
தூறல் நடுவேயும் ஒண்டி ஒடுங்கி
எங்காவது காயவைத்து
முறுக்குமாவு ,கடலை மாவு
அரைத்துவிட்டால் தீபாவளி ஆரம்பித்துவிடும்
ஆத்தாவுக்கு

சைக்கிளில் சேலை மூட்டை கட்டி
கூவிக் கூவிப் பார்க்கும்
தவணைக்காரர் அப்போவெல்லாம்
கூவவே வேண்டாம்
வரும் நேரம் விசாரித்துக் காத்திருக்கும்
திண்ணைகள்
அவர் கட்பீஸ் கடை போட்டபோது
வாழ்த்திவிட்டு தவணை தொடர்ந்தது

நாலு மணிப் படையலுக்கு
மூன்று மணிக்குத்
தையல்காரரிடம் மல்லுக்கு நின்று
குட்டிப்படைகள்
தூக்கக் கலக்கத்தோடு வாங்கிவருவது
பெரும்பாலும் சீருடையாகவே இருக்கும்

வெடிக்கடை விளம்பரத்தில்
கடை மேல் பெருக்கல் குறி போட்டு
கடல் என்று அச்சிடும் புதுமையை
வியந்தாலும்
மீதவெடிக்கு ஏலம் கேட்கவும்
அதே பின்னிரவுதான் ஏற்றது
அதுவே சொற்ப காசுக்கு ஏற்றது
குப்பை அதிகம் வரும் வெடிபற்றி
அதிகம் எரியும் பூத்திரி பற்றி
கற்ற விவரமெல்லாம்
கவனம்  இருக்கும்

செய்வதில் நாலு முறுக்கு ரெண்டு அதிரசம்
மூணு உருண்டை பகிர்வதே
சவ்வுத்தாள் உறையில்லா ஏனங்களின் காலம்
அட்டைப்பெட்டி இனிப்புகளும்
சாக்லேட் பெட்டிகளும் கனவில் கூடப்
பார்த்ததில்லை

உள்ளூர் லாலா கடைகள் ,வறுகடலை வியாபாரம்
எல்லாம் வீடுகளின் தீனி முடியும்வரை
காற்றுதான் வாங்க முடியும்
திரையரங்குகளின்
கடலைமிட்டாய் ,பொரியுருண்டைக்கும்
விடுப்புதான்

இந்த சீசனில்
சொந்தம் பார்க்கப்போவதும்
சுலபம்
தீபாவளிக்குத் தப்பித்தவறி துணிவாங்கிய
மஞ்சப்பையில்  பொட்டலம் கட்டிப் புறப்படலாம்

பருத்தி சேலைகள் எங்களுக்காகவும்,
நைலக்ஸ் சேலைகள் வசதியானவர்களுக்காகவும்
விற்கப்பட்டன.
வேட்டிகளைப் பற்றி பேச்சே இல்லை
கதரோ ,கரையோ,நாலோ,எட்டோ
போகிறபோக்கில் ...

கமல்ஹாசனும் ,கார்த்தியும்,
காஜலும்,த்ரிஷாவும்
சொல்லாதபோதும்
தீபாவளி கொண்டாடிக் கொண்டே இருந்தோம்



இப்பொழுது
சொந்த ஊரிலேயே
பட்டணக் கடையின் கிளைகள் உண்டு
நாலாயிரத்தில் தொடங்கும்
பருத்திப் புடவையை விரித்து
கிரேட் லுக் மேடம் ஹைபை யா இருக்கும்
என்றெல்லாம் கவர்வது
கட்பீஸ் கடைக்காரர் மகன்தான்
சமீபத்தில் பழகிய கழுத்துப்பட்டியை
தளர்த்த முடியாமல் சிரிக்கிறார்
முடிந்தால் வீட்டுக்கு அழைக்க வேண்டும்
நண்பர்கள் அனுப்புவதில்
சுமாரான கடையின் இனிப்புப் பெட்டியில்
ஒன்றைக் கொடுத்து அனுப்பலாம்.

பூனம் பக்கம் பார்க்கவேண்டும்
வேலைக்காரிக்கு புடவை என்றேன்
வழியில் கல்யாண மண்டபத்தில்
எதைஎடுத்தாலும் இருநூறு
பேனரின் நைலான் பாலியெஸ்டர்
விளம்பரம் நினைவூட்டினாள் அக்கா



ஏனம்-பாத்திரம்







சனி, அக்டோபர் 24, 2015

தாய்க் குலத்தின் பேராதரவுடன் ....

பாத்திரம் பண்டமெல்லாம்
பார்த்துப் பார்த்து தேய்த்து
கூடுதலாக மேலிருந்தும் எடுத்து
தேய்த்து (பொறுப்பான மருமகள் )
வந்ததும் சாப்பிடத் தோதாக
சமையல் முடித்து வைத்து
வராதவர் மனங்கோணாதவாறு
தின்ன எடுத்துவைத்து
இடையில் சூடிச்  செல்ல
உதிரி மல்லி கனகாம்பரம் தொடுத்து
பரபரக்கும் வேலை நடுவே
நீ வரியா நீ வரியா
ஆள் சேர்த்து
சென்றுவந்தவளிடம் கதைகேட்டபடியே
ஆட்டுக்கல் தெறிக்க தெறிக்க
மாவரைத்து வழித்து
வியர்வையை வழித்தெறிந்து
தீபாவளி புடவைக்கு மாறி
வீட்டுப்பாடவிசாரணையும் இன்றி
நண்டுசிண்டுகளையும் இழுத்தபடி
காட்சிதோறும்
விரைந்தவர் கண்ணீரும் புன்னகையுமே
உங்கள் வெள்ளிவிழா பொன்விழாக்கள்

எங்கள் கதாநாயகிகளுக்கு
இப்போ
நிறைய வேலையிருக்கு பாஸ்




பாடல் பெறா வாழ்வு


என்ன பொறுக்குதென்றே
தெரியாத குருவிகள்,
எப்போதாவது வரும் புறாக்கள் 
எங்கிருக்கிறதென்றே இருப்பிடம் காட்டாது
அன்றாடம் தன் குரலால் இழுக்கும்
ஒற்றைக்குயில்
கேலி செய்வதுபோல் திரும்பித் திரும்பிப்
பார்த்துக்கொண்டே தாவும் அணில்
எல்லாவற்றையும் பற்றி
எழுதியாயிற்று
அன்றாடம் ஒரு கவளம் சோற்றுக்கு
வருவது ஒரே காக்கையா என
ஏனோ நினைத்ததில்லை
நான் நினைத்தேனா
என அதுவும் நினைக்கவில்லை
எங்கள் பந்தம் ஒரு கவளம்
அதற்கு மேல் ஏதுமில்லை


இச்சை

முத்தத்தைப்பற்றியே 
பேசிக்கொண்டிருக்கிறீர்கள்
குறிப்பாகவும்வெளிப்படையாகவும்
மேலும் மேலும் வர்ணிக்கிறீர்கள்
உவமான உவமேயங்களால்
அலங்கரிக்கிறீர்கள்
பாடுகிறீர்கள்
மிகப்பெரிய அனுபவமாக
விவரித்துக்கொண்டேயிருக்கிறீர்கள்
அனுபவங்களுக்கு நேரமும்
வாய்ப்பும்இல்லாதவன்
கதாநாயகர்களின் சாகசங்கள்
தம்போல்வான் வாழ்வில்நிகழாதுஎன
திடமாக நம்பியபடி
உங்களைக்கேட்பதும் பார்ப்பதுமே
தம் அனுபவம் எனஎழுதிக்கொள்கிறான்


வருத்த வருத்தம்

இறந்தவர்
கடைசியாக என்னமனநிலையில்
எந்தவிளிம்பில்நின்றார்
என்பதை அறியாமல்
துக்கம் கேட்கப்போவது
பெருந்துயரம்
அன்றையநாளின் குலைந்த கிரமமோ
உச்சந்தலைக்கருகே உரசும் வாள்
நிர்ப்பந்தங்கள் கொண்டுநிறுத்தியிருக்கும்
இக்கையறுநிலையில் துளிர்க்கும்
உங்கள்கண்ணீரை
அவருக்கான துயரமாக மாற்றிப்
புரிந்துகொண்ட
எவரேனும் உங்களை
ஆற்றுப்படுத்தக்கூடும்
வருத்தத்தைவிட சௌகர்யமாகக்கூட
நீங்கள் உணரலாம்
பந்தலிலே பாவக்கா பாடல்
நினைவுக்குவருமுன்
எழுந்துவிடுங்கள்
சாவுவீட்டில் சொல்லிக்கொள்ளாமல்
போகலாம்
இல்லாவிடில் புன்னகைத்துத்
தொலைக்கப்போகிறீர்கள்


செவ்வாய், அக்டோபர் 20, 2015

தொலைநோக்கு


அவல்பொரிகடலையை
ஆண்டுக்கு ஒருமுறை ஆவலுடன்
ஏந்திக்கொண்டு 
சக்கரைத்துணுக்கைத் தேடியடைவதில்
மகிழ்ந்த போதும்
தும்பைவரிசையைத் தாண்டி
ஒடித்த கிளுவைக்குச்சியை
நீட்டி நீட்டி
ஓடும் கூட்ஸ்வண்டியின் பெட்டிகளை
எண்ணிச் சொல்வதில்
போட்டியிட்ட போதும்
இத்தனை அருள்கேட்கும்
ஆவல் எங்களுக்கும் இல்லை
ஈன்றார்க்கும் இல்லை

சரஸ்வதி

நூறும் ஆயிரமுமே
போதுமாயிருந்தது எங்களுக்கு
வீட்டுப்பாடம் நடுவேயும்
வீடியோகேம் நடுவேயும்
விழுந்து விழுந்துவணங்கும் பிள்ளைக்கு
முன்மழலை வகுப்பின் முன்னே
சொல்லிக்கொடுத்துவிடுகிறோம்
உந்தன் வந்தனப்பாடல்களை
லட்ச லட்சியமென்றால் சும்மாவா
அப்புறம்
கைப்பிடிஅவலோடு காட்பரிஸ்
மறவாமல் வாங்கிவிடுகிறோம்
பிள்ளைகளுக்கு அவல் சேராது


வெள்ளி, அக்டோபர் 16, 2015

உனக்காக



நட்சத்திரங்களுக்கு ஒளி குறைவு
நீ பார்க்கையில்

கதிர் எப்போதும்
உன் சிரிப்பைவிட மங்கல்தான்

சிரிப்பின் முடிவில்
உன்

கண்ணோரம் துளிர்க்கும்
கண்ணீரின் தண்மையிடம்
மழை பாடம் படிக்கவேண்டும்

இவ்வளவுதான்
இப்போ நினைவிருக்கு
வாட்ஸ் அப்பில் சுற்றுக்கு விட
நீ எழுதியது எனத் தெரியாமல்
எனக்கென்று ரசித்தது 



தலைவிதி

பன்னடுக்கு மருத்துவமனையின் 
ஏதோ ஒரு தளத்திலிருக்கும் 
உணவியலாளரிடம்
பத்தியப்பட்டியல் குறித்து,
மின்தூக்கி எதிரில்சிரிக்கும் 
பிள்ளையாரிடம் கன்னத்தில் போட்டபடி 
சிறப்பு மருத்துவர் முன் 
பவ்யம் காட்டி,
எதிர்ப்படும் காவலரிடம் 
அகால நுழைவுக்கான அபராதம் 
கையழுத்திவிட்டு ,
மூச்சு வாங்க வந்த வேகத்திலேயே 
ஆரஞ்சு  பிழியும் நேரம் 
தலைவிதி பற்றிப் புலம்ப 
ஏராளம் இருந்தது 

அடகும் அட்டை உரசலும் 
சண்டையைக் கூட சாத்தியப் படுத்தின

அடகுக்கும் ஏதுமின்றி
அட்டைக்கும் வழியின்றி
மஞ்சள் குங்குமம் குவிந்த
மரத்தடி அம்மன் முன் நின்றபின்
நீளும் வரிசையின் கடைசியில்
நின்று
படுக்கையும் பாயும் கூட இன்றி
நடைபாதையில் கிடக்கும் இடத்துக்கு
பங்கம் வந்துவிடுமோ என்ற
பதட்டத்தோடு சுருண்டவன்
வலிமுகம் சொன்னது
தலைவிதிக்கு விளக்கவுரை

ஞாயிறு, அக்டோபர் 11, 2015

ஆடும் பாடு


துள்ளும் சில நேரம்
துவளும் சில நேரம்
மருளும்,மயங்கும் ,உருளும் ,உரசும்
மேகம் போலவே திரளவும் திரியவும்
பிரியவும் உடையவும் உருகவும்
ஊறவும்
பல்கிப் பெருகவும்
புள்ளியாய்ச் சுருங்கவும் செய்யும்
இதன் பெயர்தான்
ஆன்மாவா
சனியன் என்ன பாடு

இசை நின்ற பொழுதுகளில்
காலைப் பிராண்டும்
உன்னை எப்படிக் கொல்வேன்
நான் ஓடிக் கொண்டிருக்கும்
இசை நாற்காலிப் போட்டியின்
ஒலிவிசைக் கட்டுப்பாடோ
ஒரு

பித்தனின் கையில் 

பெரிய பள்ளம்



தோரணவாயில்,கட்அவுட்,பேனர்
எந்த இலக்கணப் பிழையுமின்றி
சகல ஆடம்பரங்களோடும்
நடந்து முடிந்தது திறப்பு(திரு)விழா

என் ஆயுசுல இவ்ளோ பெரிய
பாலம் பார்த்ததேயில்லை
வியப்புடன்
பேரனோடு வேடிக்கை பார்க்க வந்தார்
பக்கத்து ஊர் முருகேசன்

நுரை ததும்பி ஓடிய காலத்து
வெள்ளத்தில்
ஆடு மாடு ஏன் மனிதர்களும்
அடித்துச் செல்லப்பட்ட கதையும்
அளவான பெருக்கில்
ஆறு குடைந்து நீந்திய பெருமையும்
பேரனோடு பேசிக்கொண்டே
வந்து சேர்ந்தார்




பாலம் கட்டிய நீண்ட வருடங்களுக்குள்
வட்டம் மாவட்டம்  ஆனகதையும்
மாற்றுப்பாதையில்
கும்பகோணம் பில்ட்டர் காபி ,பரோட்டா கடைகளோடு
வாகனப்பழுது நீக்கும் கடைவரை
ஒவ்வொன்றாய்
முளைத்து புதிய நகர் வந்த கதையும் 
மனதுக்குள் தனியே ஓட
பாலத்தின் மேல் நின்று பார்க்கையில்
என்னவோ பரவசம்தான் அவருக்கு

கீழே என்ன தாத்தா
இவ்ளோ பெரிய பள்ளம் என்றான்
ஆறுகளின் வரலாறு அறியா
பேரன்

என் பெயர் நீலா

ருந்தி வருந்திச் சொல்கிறீர்களே 
என்றுதான் வாங்குகிறேன் 
டென்ஷனும் செலவும் நீள நீள
பத்துக்கு நாலு ஸ்கின் ப்ராப்ளம் ..
 
கரைத்துக் கரைத்து ஊற்றினாலும் 
நான் வளர்கிறேன் 
எனக் குதிக்காத பிள்ளை 
உங்களைப்போலவே  கிண்ணத்தில் குழைத்து 
ஊட்டியபோது களுக்'கெனச் சிரிக்காமல் 
தூவெனத் துப்பி,விழுங்கினால் 
வீறிட்ட செல்வமல்லவா 
 
அழுக்கு நைட்டியும் 
அதில் துடைத்த ஈரக்கையுமாக ஏற்றினால் 
டிசைனர் சுடிதாரில் வந்து சிக்கெனக் 
கொளுத்தாத காரணத்தால் 
கொசுக்களும் மடிவதில்லை 
 
நானும் யோசிக்கிறேன் 
குடும்பத்தலைவியாய் உணரமுடியாமல் 
வேலைக்காரிபோல் 
திரிவதன் காரணம் 
பிளாட்பாரம் நைட்டிதானோ என...
 
நிஜப்பெயரில் இதெல்லாம் 
பகிரமுடியாமல் 
புனைப்பெயர் சூடினேன் நீலா என்று ..
 
ஐயோ ..இதென்ன 
இந்தப் பெயருக்கு 
இத்தனை போட்டியா

சனி, அக்டோபர் 10, 2015

அடையாளங்கள்

பைத்தியக்காரத்தனத்தின் அடையாளங்கள் 
எவை எவையாக இருக்கலாம்
பறந்துகொண்டிருக்கும் மகிழம்பூக்களைப்
பொறுக்கி எடுத்துப் படம்பிடிக்கலாம்
அந்தப் படத்தைப்
போட்டு
தோழனுக்கு வாழ்த்து சொல்வதைக்
கவுரவமாக நினைக்கலாம்
முப்பத்தைந்து ஆண்டுகளுக்குமுன்
தன் கனவுக்கன்னி( பாத்தியதை எங்களுக்கும்உண்டுல்ல)
அணிந்திருந்த
ஜானி ஸ்டில் முத்துமாலையை
இப்போதும் தேடலாம்
லட்சத்தைத் தொட்டு விலை சொன்னால்
ஆயிரங்களில் அடைக்கலமாகலாம்

சகபைத்தியமொன்று
தேடிக்கொணர்ந்த புளியம்பிஞ்சுகளைச்
சுவைத்தவாறே இதைத் தட்டச்சலாம் smile உணர்ச்சிலை



ஆறுதல் புன்னகை

களிம்புகளும் ,பசைக்குழாய்களும் 
இறைந்து கிடக்கும் 
மேசையடியில் அமர்ந்துதான் 
தொலைக்காட்சி பார்ப்பது 
நறநறத்துக் கிடக்கும் 
மனசுக்கென்றும் 
ஒருத்தி புன்னகைப்பாள் 
என்ற நப்பாசையில் 
சின்னத்திரையை 
உற்று நோக்கிக்கொண்டே ....


18 5 15  கல்கியில் 

வெள்ளி, அக்டோபர் 09, 2015

சமூகம்


அருவருப்பாகத்தான் இருக்கிறது
நான்கு நாட்களாகப் பார்க்கிறேன்
குப்பைத் தொட்டிக்கு வெளியில்
உதிரக் கொத்தோ
உதிரிமலர் அழுகலோ
தெரியவில்லை.
அப்புறப் படுத்தப் படாமலே கிடக்கிறது.
யாருக்குத்தான் பொறுப்பிருக்கிறது.

ஆயாசமாக இருக்கிறது



எத்தனை பேரிடம் மல்லுக்கு நிற்பது
எத்தனை பேருக்கு சொல்லிக் கொடுப்பது

உடலைத் திறப்பதால்
ஒருவரை அவமானப்படுத்திவிட
இன்னும்எத்தனை
நூற்றாண்டுகள்வரை
இம்மூடர் கூடம் துடித்துக்கொண்டிருக்கும்

தின்றால் பாவம் கொன்றால்போச்சு
எனத் தலைகீழாக்குகிறீர்கள்

யார்வீட்டுத் துக்கமும் ஒப்பாரியும்
உங்கள்தூக்கம் கலைப்பதேஇல்லை

வயிறுஎரிவதே இல்லை
ரயில் தண்டவாளத்திலோ
தூக்குக்கயிற்றிலோ
எவர்வீட்டுச் சுடரோ
இழுத்து அணைத்துப் போடப்படுவதைக்
கண்ணுற்றபோதும்

அகன்றதிரைத்தொலைக்காட்சியின்
துல்லியம் காரணமாகக்
காண்பதெல்லாம்
சேனல்காரன் போட்டியில்
வாங்கிய திரைப்படம் என்றா
நினைக்கிறீர்கள்

ஆயாசமாக என்றாசொன்னேன்
இல்லை
ஆபாசமாக எனத் திருத்திக் கொள்ளுங்கள்

சே...வாயாரத்
திட்டத் தோதாக
ஒருபோலிக் கணக்கையாவது
ஆரம்பித்துவிட வேண்டும்
முகநூலில்

சனி, ஆகஸ்ட் 29, 2015

உங்கள் மழையும், எங்கள் மழையும் ..


இங்கேதான் 
நேற்று பத்து செ மீ மழை அளவு 
பதிவானதாகக் குறிப்பிடுகிறார்கள் 
நீங்களும் நாங்களும் 
இதே ஊரில்தான்  இருக்கிறோம் .

முத்தங்களை நினைவூட்டிய 
தழுவிடத் தோள் தேடிய 
நறுமணத் தேநீரோ,
கரகரப்பும் சூடும் நிரம்பிய 
கொறிப்பான்களோ 
ஏன்
குளிரின் ஆவி பறக்கும் 
ஐஸ்க்ரீமோ ஏந்திய    மழை 
உங்களுடையது 
அது ஜன்னலின் கம்பிகளுக்கு வெளியிலோ 
இறுக மூடிய கண்ணாடிகளுக்கு அப்பாலோ 
வழிந்த மழை 

எங்களுடையது 
கூரைப்பொத்தல்வழி 
குடியிருப்புகளுக்குள் பொழிந்த மழை 
அது 
தள்ளுவண்டிகளை ஏறக்கட்டி 
நாற்றுமுடிகளையும் 
சாந்துச் சட்டிகளையும்  கைவிட்டு 
போர்த்தித் திரும்பிய சவ்வுத்தாள்வழி 
வழிந்தோடி 
அடுப்புகளை அணைத்த மழை 

வயதான, நோயுற்ற  முக்கியஸ்தனின் 
வாழ்க்கைக்குறிப்பு போல 
எப்போதும் தயாராக இருக்கலாம் 
உங்கள் மழைக்கவிதைகள் 
எங்கள் பிரார்த்தனைகள் 
விதைநெல்லோடு இருப்பதுபோல் 
அரிவாளோடு இருப்பதில்லை 

பயிர் மூழ்கியது என்ற செய்தி வந்தால் 
நகை வீடு எனச் சிலதையும் 
சேர்த்துப் படித்துக்கொள்ளப் பழக்கமுண்டா 
 இல்லைதானே 
அதனால்தான் சொல்கிறேன் 
உங்கள் மழையும் எங்கள் மழையும் ஒன்றல்ல

2015-ஜூலை-செப்டம்பர் நற்றிணை  இதழில் இடம் பெற்ற கவிதை 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...