சனி, ஆகஸ்ட் 29, 2015

உங்கள் மழையும், எங்கள் மழையும் ..


இங்கேதான் 
நேற்று பத்து செ மீ மழை அளவு 
பதிவானதாகக் குறிப்பிடுகிறார்கள் 
நீங்களும் நாங்களும் 
இதே ஊரில்தான்  இருக்கிறோம் .

முத்தங்களை நினைவூட்டிய 
தழுவிடத் தோள் தேடிய 
நறுமணத் தேநீரோ,
கரகரப்பும் சூடும் நிரம்பிய 
கொறிப்பான்களோ 
ஏன்
குளிரின் ஆவி பறக்கும் 
ஐஸ்க்ரீமோ ஏந்திய    மழை 
உங்களுடையது 
அது ஜன்னலின் கம்பிகளுக்கு வெளியிலோ 
இறுக மூடிய கண்ணாடிகளுக்கு அப்பாலோ 
வழிந்த மழை 

எங்களுடையது 
கூரைப்பொத்தல்வழி 
குடியிருப்புகளுக்குள் பொழிந்த மழை 
அது 
தள்ளுவண்டிகளை ஏறக்கட்டி 
நாற்றுமுடிகளையும் 
சாந்துச் சட்டிகளையும்  கைவிட்டு 
போர்த்தித் திரும்பிய சவ்வுத்தாள்வழி 
வழிந்தோடி 
அடுப்புகளை அணைத்த மழை 

வயதான, நோயுற்ற  முக்கியஸ்தனின் 
வாழ்க்கைக்குறிப்பு போல 
எப்போதும் தயாராக இருக்கலாம் 
உங்கள் மழைக்கவிதைகள் 
எங்கள் பிரார்த்தனைகள் 
விதைநெல்லோடு இருப்பதுபோல் 
அரிவாளோடு இருப்பதில்லை 

பயிர் மூழ்கியது என்ற செய்தி வந்தால் 
நகை வீடு எனச் சிலதையும் 
சேர்த்துப் படித்துக்கொள்ளப் பழக்கமுண்டா 
 இல்லைதானே 
அதனால்தான் சொல்கிறேன் 
உங்கள் மழையும் எங்கள் மழையும் ஒன்றல்ல

2015-ஜூலை-செப்டம்பர் நற்றிணை  இதழில் இடம் பெற்ற கவிதை 

வியாழன், ஆகஸ்ட் 20, 2015

பூ தைத்த சடை

ணிமேகலை அடிவாங்கிய 
நாட்களின் மறுநாள் 
இட்டிலி உப்புக் கரிக்கும்.

அடுத்தவீட்டு ராணி 
சொல்லிய கிசுகிசுக்களின் வாசம் 
தோசையில் அடிக்கும்

நங் நங்கென்று நசுக்கப்பட்ட 
தேங்காய்க் கீற்றுகள் 
முகம் சுளித்து வசவு வீசும் 
மாமியின் பற்களே

முறத்திலிருந்து பறக்கும் தவிடு 
தன் கவலைபோல் தோன்றுகையில் 
புடைக்கும் தாளம் வேகம் பிடிக்கும்

புழுங்கிய நெல் துழாவி 
கட்டை வாருகோல் தேயப் பெருக்கி 
முடிக்கும் அவளுக்கு 
மூவ் தடவி 
ஆறுதல்  சொல்லும் கணவன்

பூ தைத்த சடையோடு 
கண்ணாடிமுன்  எடுத்துக்கொண்ட 
படம் போன்ற பொய்யே 

8.8.15 அதீதம் மின்னிதழில் 
படம் .இணையம்

வியாழன், ஆகஸ்ட் 13, 2015

டப்பர்வேர்களின் காலம்

எத்தனை ஆயிரம் இட்டிலி,
எத்தனை ஆயிரம் தோசை..
லட்சமெல்லாம்
லட்சுமிக்கும் தெரியாது
அவள் மாக்குவளைக்கும் ..

கிருஷ்ணவிலாசில் சரியான அளவில்
எவர்சில்வர் குவளை வாங்கிய புராணம்
அரிசி ஊறும்போதெல்லாம் சொல்லிச் சொல்லி
அக்கம் பக்கத்துக்கே மனப்பாடம்.

அமாவாசை கார்த்திகை ஆட்டுக்கல்
காத்திருப்பு
எரிச்சல் இருந்தால்
நங்கென்று வைக்கவும்
கரகரவென மேலும் கீழும் இடித்து
சாய்த்துக் கரைக்கவும் தோது.
பக்கத்தில் நிற்கும் வானொலிப்பாடலை
முணுமுணுத்தபடி
மாவு அள்ளும்போது
குவளையும் குழந்தை..
புழக்கடை ஆட்டுக்கல்
புழுதியோடு கிடக்கிறது
பொங்கும் மாவின் புளித்த வாசமற்று
குவளை பரணில்
எலிப்புழுக்கையின் வீச்சத்தோடு 

எந்தப் பாத்திரமும் பேசாது
எனவே நம்பிக்கை
மணிரத்னம் ரசிகர்களுக்கு.

06 ஆகஸ்ட் கீற்று இணைய தளத்தில்

புதன், ஆகஸ்ட் 05, 2015

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்



குறுக்கே முளைத்த 
"............. ஜுவல்லரி"பலகையின் 
வளர்ச்சி  புரியவேயில்லை 
உழவு நடக்கா வயலில் 
ஒதுங்கி முளைத்திருந்த 
காட்டாமணிப் புதருக்கு....
************************************************
கண்ணுக்கெட்டியவரை 
கல்வளர்ந்த நகரின் நடுவே 
எங்கிருக்கிறதோ 
எங்கள் பத்தாயத்தின் கல்லறை 

இருந்த போதாவது சாலையோரம் 
இருந்திருக்கலாம் 
எங்கள் நிலம் 
கூட நாலு காசு தேற்றவும் 
இங்கேதான் இருந்தது 
எனச் சந்ததியிடம் காட்டவும்...
***********************************************
எங்களைப்போல் 
நீங்களும் இருந்துவிடாதீர்கள் 
உங்கள் வயலில்,தோப்பில்,கொல்லையில் 
நின்று 
படம் எடுத்துக் கொண்டுவிடுங்கள் 
குறைந்தபட்சம் செல்பி ..
வரலாறு முக்கியம் 
*****************************************
அக்டோபரில் வேண்டுமானாலும் 
தமிழ்ப் புத்தாண்டு பிறக்கட்டும் 
பச்சடி வைக்க வருடம் முழுதும் 
மாங்காய் கிடைக்கிறது 
பழமுதிர் சோலைகளில் 
**********************************

நாப்கின் பருவம்



கருப்பு நெகிழிக்குள் 
பொதியும் பொதியை 
ஒவ்வொருமுறையும் 
மாற்றித்தான் வாங்குகிறேன் 
ஒரு பிராண்டுக்கும் 
ஓய்வு தரும் ராசியுமில்லை 
ஓயும் ராசியுமில்லை.

உறிஞ்சுபவருடையது விடாய்.
நாப்கின்களே ,
மாதவிடாய் மட்டும் 
ஏன் என்னுடையது 

MRP,தள்ளுபடி 
இலவசம் எதையும் 
சரிபார்த்ததேயில்லை 
நாப்கின் உறையை 
வெளிச்சத்தில் தூக்கி 

மறந்தும் மறந்துவிடாமலும் 
மறந்தும் இருந்துவிடாமலும் 
எச்சரிக்கை கற்பிக்கும் நிறம் 
சிவப்பு 
மறந்தும் எறிந்துவிடாதிருக்கவும் கூட 

மலக்குழி அடைக்கும் 
பஞ்சுப் பொதிகள் 
காட்டிக் கொடுக்கின்றன 
அலட்சியத்தையும் அறியாமையையும் 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...