ஞாயிறு, நவம்பர் 13, 2016

செல்வதும் செல்லாததும்

என்ன செய்ய
எந்தக்கணமும் நீ நீயல்ல
என்ற உத்தரவு வரலாம்
செல்லத்தக்க அன்பு பற்றி
செல்லத்தக்க புன்னகை பற்றி
செல்லத்தக்க விரோதம் பற்றி
செல்லத்தக்க நோய் பற்றி
செல்லத்தக்க கும்பிடு பற்றி
முன்கூட்டியே சொல்லமுடியுமா
உத்தரவுகளின் பின்பக்கத்தில்
பழைய பாக்கிகள் போல
பழைய பற்றுகளை
பழைய எதிர்ப்புகளை
பழைய உறவுகளை
பழைய நினைவுகளைக் குறித்துத்
தருவாருண்டா
படர்கிளைகளைக் கழித்துவிட்ட 

முருங்கை போல நிற்கத் தயாராக
இருக்கட்டும் மனது
வரிசைகளில் நிற்கும்போது
கைபேசியில்
ஜல்லிக்கட்டு விளையாட முடியுமென்றால் 

ஏது கவலை


எறிந்த முதுகெலும்பு

விட்டுவிடு விலகிவிடு என்று 
யாருக்கும் உத்தரவிட 
இயலா அடிமைகள் நாங்கள் 
பிறந்தபோது முதுகெலும்பு இருந்திருக்கலாம் 
சதைப்பிண்டத்தையே ஆதாரமாக 
தகவமைத்துக் கொண்டுவிட்டோம்
எப்போதும் குனிய
குட்டிக்கரணம் போட
இலைபோர்த்திக் கதையெழுத
கற்பனையிலேயே புளகாங்கிதம்பெற
எல்லோருக்கும் தோதாக
சாம்பல்சத்து தேவைப்பட்ட சந்தர்ப்பங்களில்
எடுத்துக்கொள்ள ஏற்றபடி
எரித்து வைத்திருக்கிறோம்
மற்றபடி
பால் வேறுபாடில்லா குலவழக்கம் இது
என்பதையும் பதியுங்கள்

உருளைக்கிழங்கு துண்டுகளின் பிம்பம்


தும்பைச்செடிகளும் கீழாநெல்லியும்
ஓரமாய்ப்பெருகிக் கிடக்கும் ஒரு பாதையில்
நடந்து சென்றிருந்தோம்.
வராமல் கூட இருந்திருக்கலாம்
ஆனால்
படுபாடு பட்டு வந்தாயிற்று
திடீரென போய்ச் சேர்ந்து
புதிய சமையலொன்றைச் செய்யும்
அசௌகர்யம் தந்த குற்ற உணர்வோடு
கால்களைக் கழுவிய
அதே கிணற்றடி
உள்ளே கசகசத்த நெருக்கத்திலிருந்து
தப்பிக்க ஏற்ற பதுங்குகுழிதான்
சகடையில் இப்போது
டயர்களால் ஆன கயிறு
குறைந்தது நான்கு பண்டமில்லாமல்
இலைவிரிக்க மாட்டேன் எனத்
தூக்கிச் செருகிய சேலையும்
உடைந்த பற்களிடையே
வழிந்த புன்னகையுமாக
ஓடிக்கொண்டிருந்த அத்தைதான்
முன்வாசலில் நாற்காலியில்
சார்த்தப்பட்டிருக்கிறாள்
இந்த வீட்டின் நகரக்கிளையில்
உருளைக்கிழங்கைத் தோல்சீவி
சமைப்பதா ,அவித்து உரிப்பதா
எது சிக்கனம்
என்ற நீள் விவாதத்தின் பின்
சமைத்து பரிமாறப்பட்ட இரண்டே துண்டு
போல கிணற்றின் நீரலைவில் தெரிந்தது
திடுக்கிட்டுத் திரும்பியபோது
நீரிறைக்க வந்திருந்தாள் மருமகள்
அவள் கைகளின் நீட்சி போல


நீர்மையற்ற வாழ்வு

உங்களோடுதான் அவர்களும் இருந்தார்கள் 
அல்லது
அவர்களோடுதான் நீங்களும் 
சரி 
உங்களைப்பற்றி சொன்னால்தான்
உங்களுக்குப்பிடிக்கும்
முதலிலிருந்தே வருகிறேன்
உங்களோடுதான் அவர்களும் இருந்தார்கள்
பொருள் வந்த பொழுதிலோ
பொருளின் பொருளறிந்த பொழுதிலோ 

நிகழ்ந்த நகர்வு அது
நகர்ந்தது நீங்களென்பதால்
அறியாது
எப்போதும்போல் சிரிக்கும்
அந்த முகம் எரிச்சலூட்டுகிறது
அவமானம் தருகிறது
கொஞ்சம் கை கொடுத்தாலென்ன
கேட்கும் குரலும் விரோதமாகிவிடுகிறது
சுற்றிப்பாருங்கள் பாளம் பாளமாய்
வெடிப்பு
நீர்மை காய்ந்த சேறு



காலம் கேள்விகளால் தொடுக்கப்பட்டிருக்கிறது


கடலாகவோ மலையாகவோ
விரிவானாகவோ சொல்லிவிடமுடியவில்லை
காலத்தை
கோபமாகவோ மகிழ்ச்சியாகவோ
குமைவாகவோ அணுகமுடியவில்லை
காலத்தை
அறிந்ததாகவோ அறியாததாகவோ
நுனிப்புல்லாகவோ உணரமுடியவில்லை
காலத்தை
கொண்டதாகவோ இழந்ததாகவோ
ஏங்கியதாகவோ விடமுடியவில்லை
காலத்தை
உன்னுடையதாகவோ என்னுடையதாகவோ
நம்முடையதாகவோ பொதியமுடியவில்லை
காலத்தை
இறுகினால் இற்றுவிடுவிடுமோ
இளகினால் கொட்டிவிடுமோ
என்ற பாவனைக் கேள்விகளால்
தொடுக்கப்பட்டிருக்கிறது காலம்
மாலை வாடிவிடாது என்ற நம்பிக்கையுடன்...

செவ்வாய், நவம்பர் 08, 2016

இட்லி அரிசியும் சாப்பாட்டு அரிசியும்


நிறைநாழி நெல் முந்தானையில் ஏந்திக்கொண்டுதான் 
உள்ளே நுழைந்தார்கள்
வாழவந்த பெண்கள்
மணையில் அமருமுன் கவனமாக
அடியில் நெல் பரப்பியே சமுக்காளம்
விரிப்பது மங்கலநிகழ்வுதோறும்
கொத்தான புதிர்நெல் எரவாணத்தில்
அடுத்த கொத்து வரும்வரை
உலர்ந்தாலும் உதிர்ந்தாலும் தொங்கும்
பத்தாயங்களின் வாசனையோடு
கோணிச்சாக்குகளின் உதறலோடு
மழையும் வெயிலும் முற்றத்தில் இறங்கின
இதெல்லாம் தொன்மமாகிவிட்ட வீடு இது
நேராக உட்கார்ந்தே அறியாத தலைவன்
சாய்வு நாற்காலியில்
அகன்ற திரை தொலைக்காட்சி பார்த்தபடி
நடவு,அறுப்பு என்று அலைந்துகொண்டிருந்த தலைவி
நல்லவேளை நமது நாலு ஏக்கரும்
பிரதான சாலையில் இருந்தது
என்று பெருமூச்சோடு ஆறுதல் அடைகிறாள்
நல்லவேளை நமது ஊருக்கு
கலெக்டர் ஆபீசும் கல்லூரியும் வந்தது
என்கிறாள் தாய்வீடு வந்திருக்கும்
இளைய மகள்
நல்லவேளை நீயும் அப்பாவும்
வயலை மனையாக்க சம்மதித்தீர்கள்
என்றாள் தாய்வீடு வந்திருக்கும்
மூத்தமகள் தலைதுவட்டியபடி
உங்கள் வாழ்வு அல்லவா
என்றபடி தானும் தலைதுவட்டத்
தொடங்கினாள் தலைவி
அவர்கள் அப்போதுதான் துக்கவீட்டிலிருந்து
திரும்பியிருந்தார்கள்
காய்ந்த வயல் பார்த்துக் கடனை நினைத்துப்
பாலிடால் பருகிய பங்காளி சாவு அது
"அம்மா என்ன வாங்கவேண்டும் "
பட்டணத்திலிருந்து வந்திருக்கும்
மகன் கேட்கிறான்
அரிசி வாங்கணும்பா
இட்லி அரிசியா சாப்பாட்டு அரிசியா
தலைவர் சற்றே திரும்பிப் பார்த்தார்
எரவாணத்தில் காய்ந்த புதிர் ஆடும்
இடத்தை

திங்கள், நவம்பர் 07, 2016

இதுவும் அதே ஏன்தானா

ஏன் இழந்தவற்றுக்காக
வருந்தவேண்டும்
ஏன் தவறியவற்றை நினைத்து
 தலையிலடித்துக்கொள்ள வேண்டும்
ஏன் கடந்தவர்களை நினைத்துக்
கண்ணீர் விடவேண்டும்
ஏன் உளறல்களை நினைத்து
கொதிக்க வேண்டும்
ஏன் பித்துகளை தக்கவைக்க 

இப்படித் தவிக்க வேண்டும்
ஏனென்று தெரியாதவற்றையெல்லாம்
ஏனிப்படி ....


கடந்த எழுத்து

சென்ற காலங்களில் சிந்திய புன்னகை
காற்றிலேயே 
கரைந்து போயிருக்குமென்று நம்பியிருந்தேன்
அதே பருவத்தின் திரும்பலில் 
ஒரு முல்லைப்பூ இப்படி 
அகழ்ந்தெடுத்துக் கடைபரப்பி
அழவைக்குமென அறியவில்லை
பழைய காகிதங்களைக் கழிக்கும்போது 
திடுமென ஒரு கையெழுத்து பாதி அழிந்து
மீதி அழிக்க கண்ணீர் 

பொங்குமெனத் தோன்றவில்லை
கடந்தவையெல்லாம்
கடந்து விடுவதில்லை




அது போலில்லை

ஒரு பெருவனம்
ஒரு சிறுநதி
இரு இளம்பிடி
எங்கோ கேட்ட கதையின் 
தொடக்கம்போல இருக்கிறதா...
தொடக்கம் போல 
தொடர்ச்சி இருக்க வாய்ப்பில்லை
இன்னும் சொல்ல வேண்டுமா





இயக்கிய மலர்

மலர் ஒன்றோடு உரையாட நேர்ந்தது
முதல் கேள்வியே 
கொஞ்சம் அசைத்துவிட்டது போலும்
இப்படி ஒற்றைநிறமாக இருப்பது 
அலுப்பாயில்லையா ?
கொஞ்சம் வேறு வண்ணமும் கலந்திருந்தால் 
கவர்ச்சியாக இருக்குமே என்று வருந்தியதுண்டா?
தேவையில்லா தொந்தரவுக்கு 
ஆட்பட்டுவிட்டதைப்போல
காம்பின் நுனிவரை 
வளைத்து வளைத்து ஆடியபின்
என் நிறம் என் பெருமை
நீ கேட்டதுபோல் ஏங்க ஆரம்பித்திருந்தால்

யுகங்கள் கடந்து 
என் வர்க்கத்தை வளர்த்திருக்க முடியாது
இல்லாதது பற்றியோ இழந்தது பற்றியோ 

கலங்குவது 
இயக்கத்துக்கு எதிரானது என்றது
பழக்கதோஷத்தில் 

அது எங்கோ உறுப்பினர் எனக்கருதி 
நகர்ந்துவிட்டேன்


இடிந்த வாழ்வு

எல்லாம்தான் நடந்திருக்கும்
எல்லாரைப்போலவும் நடந்திருக்கும்
நாய்அலைச்சல் அலைந்து 
உண்ணாமல் உறங்காமல் உடுத்தாமல் 
இழுத்து இழுத்துப் பிடித்தது போதாமல்
கையெழுத்துக்களால் உயிர்ப்பித்த
கனவுகள் இருந்திருக்கும்
தேடித்தேடி தேர்வு செய்து
கொஞ்சம் அப்படி இப்படிதான் 

இருக்குமென்று பொய்யைய்யும்
சேர்த்தே படி ஏற்றிக்கொண்டு
நுழைந்து பார்த்திருப்பார்
சுளையாக எண்ணிவைத்து
சுமாராக எழுதிக்கொண்டிருக்கலாம்
பத்திரிகையா,கட்செவியா 

எப்படி அழைப்பது என்று
 திட்டமிட்டுக் கொண்டிருந்திருக்கலாம்
தானாய் இடிந்தபோது பாதி
தள்ளி வெடித்தபோது மீதி
புகைந்தது வாழ்வு
#மவுலிவாக்கம்



அளவிலா விளையாட்டுடையான்

மிளகாய்த்தூள் அளவான காரமாகவும்
உப்பு அளவான கரிப்பாகவும்
புளி அளவான புளிப்பாகவும்
சர்க்கரை அளவற்ற இனிப்பாகவும்
அமைந்திட அருள்வாய் எம் தந்தையே
அப்படியே தண்ணீரும் அளவான அளவாக எடுக்கவும்
அளவுகளோடு பிறந்து அளவாக வளர்ந்து
அளவாகப்பேசவும்
அளவாக சமைக்கவும் அருள்வீராயின் 

அளவற்ற நன்றி உடையவளாகிடுவேன்
அளவிலாத்துயர்களையும்
அளவிலா உளறல்களையும்
அளந்துகொண்டிருக்காத உள்ளம் 

இலவச இணைப்பாக அருளுவீராக


வெள்ளி, நவம்பர் 04, 2016

படைப்பு

கத்தியில் ஏழுவகை
கரண்டியில் நூறுவகை
தட்டு,தாலம்,ஒட்டிசமைக்க,
ஒட்டாமல் எடுக்க ,
ஊர்சமையல்,உலகசமையல்
முறைக்கேற்ற முன்னூறு எடுப்பு
எல்லாம் வாங்கி எல்லாம் கற்று
எடுத்து வை இரண்டடிசந்தில்
ஓடுங்கால் ஓடி ஒடுங்குங்கால் ஒடுங்கி 

நாடுங்கால்
நல்லவண்ணம் படைத்து
சாடுங்கால் சத்தமின்றி துடைத்து
வாடுங்கால்
வருமானம் தேடி ஓடு ஓடு
அவரவர் வயிறு அவரவர் பாடு
அனைவர் வயிறும் உந்தன் பாடு


விடமுண்ட கண்டன்

ஆரஞ்சு நிறத்திலான கேசரித்துண்டுகள் 
விருந்தினரை,
வீட்டுக்குழந்தைகளை,
கட்டிகளின்றி கிளறிமுடித்தவளை
என எத்தனை பேரையோ 
பரவசப்படுத்திய காலத்தில்
புறப்பட்டோம்.
அதிகபட்ச உபசாரத்தின் அடையாளமான 

கேசரித்துண்டுகள் மஞ்சள் நிறம்
உற்ற காலை
நாம் கொஞ்சம்
அந்த நிறப்பொடி போலக் 

கொஞ்சமே கொஞ்சம் திடுக்கிட்டோம்.
மூடநெய்பெய்து முழங்கை வழிவார 

சர்க்கரைப்பொங்கல் தின்று சலிப்புற்ற சாமியெல்லாம்
கேசரித்துகள்களில் பசியாறத் தொடங்கியபோது
நமது உலகம் வண்ணமயமாகிவிட்டது
குட்டி குட்டி குப்பிகளில் நிறைந்த
வாசனாதி திரவியங்களும் பொடிகளுமாக 

பொங்கும் நிறங்களில் படைக்க விரும்புகிறோம்.
கேசர்பாதாம்,பிஸ்தா பச்சை,

வாடாமல்லி வண்ணங்களில் ததும்பும் 
பண்டபாத்திரங்களைப் பார்த்து 
பெருமூச்சு விடாதிரும் ஈசனே
இதிலாவது வண்ணங்களைத் தக்கவைக்கிறோம்.
எல்லாம் ரசாயனம்
எம்மைப்போல் குடல் பெறவில்லை
நீர்



திங்கள், அக்டோபர் 31, 2016

யுகங்கள் கடந்து

நைந்த மனதோடும் அதைவிட 
நைந்த தேய்பஞ்சோடும் 
ஒட்டிக்கொண்டிருக்கும் சோப்பை
முடிந்தவரை துடைத்து துடைத்து
தேய்ப்பது அன்றாட நிகழ்வு
கனகத்துக்கு
ஆனாலும் பொழுது மாறி விடிந்தது
மூடிய கதவுச்சமூகத்தின் 
மூன்று வீடுகளுக்கான பணியாளாக வந்த
நாளிலிருந்து வாழ்க்கை 
சிலபல சில்லறை சௌகரிய 
கணங்களைக்கொண்டு வந்திருந்தது.
குழாய் திறந்தால் கொட்டும் தண்ணீர்
மிஞ்சியதென்றாலும் வண்ணமான உண்டி
மண்ணெண்ணெய்க்கு அலையா
மகிமை மிகு வாழ்வு
மற்றபடி ஏங்குவதெற்கெல்லாம் நேரமுமில்லை
எதைப்பார்த்து ஏங்குவதென்று
தெரியவுமில்லை
அதே தேய்பஞ்சும் சோப்பும்தானென்றாலும் 
சலிப்பில்லை
அவர்கள் மொழி அவர்கள் வழி
அவர்கள் கருவி அவர்கள் தரை
பழகத்தான் நாள்பிடித்தது
தப்பிப்பிழைத்து தடுமாறி 
வந்துவிட்ட சமையலறைக்குழாயடி ஒற்றைக்கரப்புக்கு
ஊளையிட்ட மக்களைப்பார்த்து
சிரிக்கிறாள்
எத்தனை உரையாடல்களை
இடுக்குகள்தோறும் நுழைந்து 
வெளியேறும் கரப்புகளோடு 
நிகழ்த்தியிருக்கிறோம்
தலை துண்டானாலும் ஒன்பது நாள் வாழும் கரப்பு
பசியில் உயிர்விடும் என்றறிந்து
இனமென்று அடிக்காது துரத்தியிருக்கிறோம்
பாற்சோறு போட்டும் பதமான உணவிட்டும் 
நாய்பூனை வளர்ப்போருக்கு
தானே ஒளியும் தனிக்கரப்பிடம்
என்ன அச்சம் என முனகிக்கொண்டாள்
கூட்டிப்போகலாம் தன்னோடு மாலை 
எனப்பரிவோடு யோசித்தபோது
"படம் நிச்சயம் ஹிட் ஹிட்" என ஓடிவந்தான் ஒருவன்
தொடர்பில்லாத செய்தியென
ஒருகணம் திரும்பித்திரும்புவதற்குள்
கரப்பைக்காணோம்
காலந்தோறும் வாழ்வதைக் கற்பதென்னாளோ 
கனகம் முனகியது கரப்புக்குக் கேட்டது


இருபத்தோராம் நூற்றாண்டின் திருவிளையாடல்

கருவிகளை எவ்வளவு 
கருணையோடு வடிவமைத்திருக்கிறோம்
அழித்துவிடு என ஆணையிட்டாலும்
தெரிந்துதான் சொல்கிறாயா
என்கிறது
நிச்சயமாக,சத்தியமாக
ஈசன்மீது ஆணையாக என
ஏ பி நாகராஜனாகும் வரை
விடாதிரு நீயாவது



இதுவும் பண்டிகைதான்

யாருடைய கருணைவழி 
பண்டிகை கொண்டாட்டத்தையோ நம்பி 
வேகின்றன பலகாரங்கள்
யாருடைய கனிவையோ நம்பி
காத்திருக்கின்றன 
மலிவுவிலைப் புத்தாடைகள்
சேரந்து கொண்டாட வந்திருக்கும் 
பண்டிகை பற்றி உணர்விலா
உறவுகளின் வீம்பில்
சில கண்ணீரத்துளிகளை
அடுப்பின் தீயில் சொரிந்து
கருணை காக்கும் தெய்வங்களின்
அருளாசியில்
நிரம்புகிறது குவளைகளின் இலக்கு
கோடிகளை விருப்ப நாயகன்
இழக்காதிருக்க ஓடிக்கொண்டிருக்கிறான் 

வந்த மகன் வெந்த பலகாரச்சுவையறிய
நேரமின்றி
யாருக்காக..இது யாருக்காக
எந்த நாளில் பாடியிருக்கிறாள்
அவள்
ஆயிற்று தீபாவளி



சுற்றிய மத்தாப்பூ

எத்தனை தீபாவளிகளைக் கடந்துவிட்டோம்
தூங்கிவிழுந்தபடி மருதாணி வைத்துக்கொள்வதும்
தைக்க கொடுத்த பாவாடை 
கைக்கு வருமா என்பதுமே 
கவலையாக இருந்த தீபாவளிகள்
வளையலோ,பொட்டோ வாங்கிக்கொள்ள 
நமஸ்காரங்கள் கைகொடுத்த தீபாவளிகள்
மழை கெடுத்த பண்டிகையை
உள்வீட்டு சங்குசக்கரங்களோடும்
பொட்டுவெடிகளோடும் கடந்த
தீபாவளிகள்
கண்ணில் விழுந்த அரப்புத்தூளை
மறந்து அதிரசம் ஏந்திய 

கைகளில் நிரம்பிய தீபாவளிகள்
அவ்வருட உறவின் இழப்பு 

செலவைக்குறைத்த நிம்மதியில்
பெரியோர் இருக்க 

அர்த்தம் ஏற்காது
அழுகையினால் முகம் வீங்கிய
தீபாவளிகள்
பாதி வெந்த நேரம் முதல்
பள்ளியிலிருந்து திரும்பும் நேரம்வரை 

முறுக்கு கிறுக்குகளாய்ச் சுற்றிய தீபாவளிகள்
ஒற்றைப்புத்தாடையை காட்டிமகிழவே 

பள்ளிவேலைநாளுக்கு காத்திருந்த தீபாவளிகள்
கண்டதும் அதிகமில்லை
தின்றதும் அதிகமில்லை
உடுத்தியதும் ,படுத்தியதும்
அதிகமில்லை
மிட்டாய்ப்பெட்டி சுமந்து
அன்றாட உடுப்போடு ஊர்சுற்றவும்
உலகுசுற்றவும் கற்ற மக்களே
நினைவுகளே அதிகம்
எங்களுக்கு


படம்இணையத்திலிருந்து 
எஸ்.இளையராஜாவின் தூரிகை  



புதன், அக்டோபர் 26, 2016

பெயரில் என்ன இருக்கிறது

குடை என்பது நிழல்
நிழல் என்பது குளிர்ச்சி
குடை என்பது காப்பு
வீழ்ந்த வெண்கொற்றக்குடைகளையும்
காக்க மறந்த குடைகளையும்
காற்றோடு பறந்த குடைகளையும்
நினைவூட்டுகிறதே
இதற்கு ஏனம்மா குடைமிளகாய்
எனப்பெயர்
அது...அது...ஆங்
அது குடைமிளகாயில்லை
குடமிளகாய் குடமிளகாய்
பதிலில் தொடங்கியது கேள்வி
குடம் நீர் நிரப்பிவைப்பது
நீர் தண்மை மிக்கது
தன்மையெலாம் சரிய
நீரிலாது ஆடும் குடங்களையும்
அடித்துக்கொள்ளும் குடங்களையும் 
நினைவூட்டுகிறதே
இதற்கு ஏனம்மா குடமிளகாய் எனப்பெயர்
போடா
குடையுமில்லை குடமுமில்லை
இது கேப்சிகம்
Capsicum

கையெழுத்து கலைக்கும் நினைவுகள்

எப்போதோ உதிர்ந்த பன்னீர்ப்பூ
சரசரவென சகடையில் 
ஏறி இறங்கிச்சரிந்த வாளிநீர்
ஓரம் பெயர்ந்த துளசிமாடம்
மஞ்சளாய்ப்பழுத்து மட்டை தொங்கும் 
கமுகமரம்
சுருள் சுருளாய்ப்பலவண்ண
குரோட்டன்
செண்டுமல்லிப்புதரின் அருகே
போகும்போதும் வரும்போதும்
குத்தும் எலுமிச்சை
கறுப்பு வெள்ளையில் நிலைத்த
சித்திரம் தருவது 
அலுத்துக்கொள்ளும் பெருமையாக இருந்தது
எப்போதாவது போய்ப்பார்க்க
உரிமையிருந்தவரை
கையெழுத்தும் காசும்
எதையும் மாற்றும் அழிக்கும்
இதையும்

எண்ணால் கட்டியது

ஒவ்வொரு வீட்டுக்கும்
ஒரு அடையாளம் இருந்தது
தொழிலாலோ,தோற்றத்தாலோ,
பூர்வீகத்தாலோ
அடைமொழி சூட்டி
அழைத்துக் கொண்டிருந்தோம்
கட்டிட மாற்றங்கள் கூட காரணிகளாகும்
புதுவீடு,மாடிவீடு என
ஒன்றுபோல இரண்டிருந்தால்
பிள்ளைகளால் பேர் சொன்னோம்
எங்கள் ஊர் அஞ்சல்காரரும் 
எண்களை எழுத்தில் மட்டுமே பார்ப்பார்
அடுக்கிவைத்த தீப்பெட்டிகளில்
குடியேறியபின் எண்ணே கண்ணானது
ஒன்று கூடினாலும் குறைந்தாலும்
போகுமிடம் சேரமாட்டீர்
கறாராய்க் குறியுங்கள்
இப்படியாரும் இங்கில்லையென
அடுத்த கதவின் இடுக்கும் முறைக்கும்


ரோஜா தேநீர்

இவ்வளவு சர்க்கரை இன்ன நிறஅளவு
இவ்வளவு திடம்
என்று தனது
விருப்பத் தேனீரை 
அடையாளம் காணவும் நிதானமாக அருந்தவும்
உங்களைப்போல
தெருமுனைக்கடை வரையல்ல
நூற்றாண்டுகளைக் கடந்து
நடந்திருக்கிறாள் உங்கள் பிரியசகி
காதலைச்சொல்ல
ரோஜா வேண்டாம்

விளக்கிற்கு வெளியிலிருக்கும் பூதங்கள்

விளக்கிலே திரி நன்கு சமைந்தது
 எனக்கவிஞன் எழுதியதெல்லாம் 
தெரியாமல் 
என் முன்னோடிப்பெண்டிர் 
அரிக்கன் விளக்கு,அடுப்படிப்பிறை விளக்கு
நல்ல விளக்கு,வாசற்பிறை அகல்
காடா விளக்கு, கண்ணாடிக்கூண்டிட்ட
இரவுவிளக்கு எனப்பார்த்து பார்த்து 
தேய்ப்பதும் திரிப்பதும் 
துடைப்பதுமாகவே 
வாழ்ந்தபோதும் 
விளக்கேத்த வந்தவளாக மட்டுமே இருந்து 
ஒளியை உணராது போயினர்
புளியும்,மண்ணும்,சாம்பலுமாக
அவர்கள்
தேய்த்த தேய்ப்பிற்கு நியாயமாக
ஒருமுறை கூட விளக்கிலிருந்து

 பூதம் வரவில்லை
வெளியிலே உலவிய பூதங்களுக்கு 

இவர்களன்றோ அடிமைகள்

கருணையின் அடையாளம்

மரணத்தைக்கண்டு அஞ்சவேண்டாம்
மரணத்தை இகழவேண்டாம்
மரணத்தின் கரங்கள்
கருணை மிக்கவை
உங்களையும்
என்னையும்
நாம் போற்றும் கடவுளையும் விட 
கருணை மிக்கவை
தீர்க்க முடியாதவை என்று 
நீங்களும் நானும் நமது கடவுளும்
கைவிட்டவற்றை
தீர்த்து வைப்பதைவிட 
வேறென்ன கருணை இருக்க முடியும்

பூக்களிடமிருந்து தப்பித்தல்

யாரோ ஒருவரின் புத்தாடையின் ஒருபகுதியாக 
எப்போதோ இருந்த பூக்கள்
நிறம் குன்றாது
காற்றிலாடுகின்றன
திகைப்பாயிருக்கிறது
ஏந்திக்கொள்ளவோ ரசிக்கவோ 
இயலாத துர்ப்பாக்கியத்தில் நானிருக்கிறேன் 
என்பதை அந்தப்பூக்களிடம் 
எப்படிச்சொல்வதென

என்னைப்பார்த்து அவை பூக்கவுமில்லை
என்னைப்பார்த்து ஆடவுமில்லையென்ற 

சமாதானத்தோடு நகர்ந்துவிடுகிறேன்
என்னை
வேறெப்படி காப்பாற்றிக்கொள்ள


ஏறுவதும் இறங்குவதும்

நேரலைகளில் உணர்வுபொங்க
 வழக்குகளைப்பற்றியோ
கலகங்களைப்பற்றியோ
மறியல் பற்றியோ
சொல்லிமுடிக்கையில் தவறாமல்
ஒளிப்பதிவாளர் பெயரும் சொல்லிமுடித்து
 மூச்சுவிட்டுக்கொள்ளும் செய்தியாளர் 
அடுத்த இடத்துக்கான தகவல் தேட
குறிப்பிட்ட செய்திகளில் 

கூச்சலிட ஏற்றது எதுவென விவாதக்குழு
ஆய்ந்திருக்க
எப்போதும் போல் தள்ளுவண்டி
தண்ணீர்கேன்,பெட்ரோல்பங்க்
பள்ளி,கல்லூரி,அலுவலகம், அடுப்படி 

என்ற வட்டத்துக்குள் சுழலும் உலகு
நியாயங்கள்
ஏறுவதும் இறங்குவதும்

 உமக்கின்றி எமக்கில்லை


புதன், அக்டோபர் 19, 2016

எங்களிடம் நீர் இருந்தது

எங்கள் கிணறுகளில் நீர் இருந்தது
பத்து வீட்டுக்காரர்கள் வந்து இறைத்தபோதும்
பகிர்வதில் கவலையின்றி இருந்தோம்
எங்கள் குளங்களில் நீர் தளும்பியது
உயர்த்திக்கட்டிய உள்பாவாடையுடன் 
கதையளந்தபடி துணி சவக்காரத்தையே 
இரண்டு இழுப்பு தேய்த்து 
உடைந்த கரையின் சில்லில் 
மஞ்சள் உரசிக்குளியல் முடிப்பதில் 
கூச்சமின்றி நடந்தோம்
பிழிந்த துணி தோளிலும் 
தெருமுனைக்குழாயின் குடம் இடுப்பிலுமாக
நடந்தபோதும்
நனைந்த உடலின் வளைவுகள் 
விரசமாகத் தெரியாத சகமாந்தர்
உடன் நடமாடினோம்
எங்கள் ஆறுகளில் நீரோடியது
கரையோர மரங்களின் பூக்களும்
வறண்டகாலத்தில் விழுந்திருந்த இலைதழையுமாக
புனல் வந்தபோது ஒரு துறையில்
பெருக்கு கொண்டாடினோம்
பிள்ளைகள் மதகிலிருந்து சொருகு நீச்சல்பழக
அப்பன்கள் ஆடுமாடுகளை
வைக்கோல் பிரியோடு தேய்த்துக்கொண்டிருந்தார்கள்
கிணறுகளில் நீரிறைக்க வலுவில்லாது 
பொருத்திய
மோட்டார்கள் பரிதாபமாக முனகும்போது 
விழுந்த நீரிலும் வண்டல்
பிடித்த மனதிலும் அதுவே
மீன்வளர்க்க ஏற்றதாக
குளமும் குட்டையும் மாறியபோது
வீடெங்கும் குளியலறை கட்டுமளவு
முன்னேறிவிட்டோம்
யார் வீட்டு குளியலறையை யாரோ 
எட்டிப்பார்க்கும் நாகரிகத்திலும்
எங்கள் 
ஆறுகளா....
மணல் கிடங்குகளாகி வெகு காலம்
தண்ணீரை அனுப்புவாயா இல்லையா எனத்
தண்டவாளங்களில் விழுந்து கிடக்கிறோம்
விழுந்துதான் கிடக்கிறோம்

படம் .நன்றி sunderarajan 

செவ்வாய், அக்டோபர் 18, 2016

காலத்தில் உறைந்தவள்

காதுவளர்த்த காலத்தின் நிறைவில் வந்து சேர்ந்த 
வளையங்கள் காதை இழுப்பதில் 
தண்டட்டிகளின் தங்கைமுறை என்ற 
அவதூறு உலவியது
வலுவில்லா எல்லா வதந்திகளையும்போல
அது மறைய
காதுகள்தோறும் வளையங்கள் கச்சேரி தொடங்கின
ஒட்ட வளைந்தவை மட்டுமல்ல
வாத்துகளை,தாமரைப்பூக்களை
,மணிகளை,முத்துகளை 

இணக்கமாக சேர்த்துக்கொண்டு
ஆடிக்கிடந்தன
இளமையின் அடையாளமான மெல்லிய
வளையங்களைப் பட்டையாக்கி 

வளமைக்காக ஒரு குண்டும் நட்சத்திரமும் 
சேர்த்துக்கொண்ட பெண்களால்
அவற்றைத்துறக்கவே முடியவில்லை
லதா மங்கேஷ்கர் பாடும்போது 

அவை ஆடுமா இல்லையா
சுசீலா மாற்றிவிடுவாரா
ஷோபனா ரவிக்கு செண்டிமெண்டா 

என்றெல்லாம்
சமூகமே கவலைப்பட்ட ரிங் எத்தனை
தங்கவளையங்களன்றி
பிளாஸ்டிக்,சில்வரில் சின்னதாய்த்தொடங்கியவை 

விரிந்து விரிந்து 
தோளைத்தொட்ட விட்டங்களான போதுதான்
புத்தகங்களை 

நெஞ்சோடு அணைத்தபடி 
வீதிகளில் இறங்கிய வரலாறு தொடங்கியது
ரிங் மாஸ்டர்களாக ஆண்களே நிலைத்த மண்ணில் 

ஆடும் வளையங்கள் 
ஆயிரக்கணக்கான பெண்களின் 
அடையாளமானது
லட்சம் மாதிரிகளைக் குவித்து
காதணி திருவிழா நடத்தும்
கடைகளேதுமில்லா காலத்தின் பிரதிநிதியாக 

வளையம் கேட்டு
வந்து நிற்கும்அபூர்வ பெண்களின்முன்

 திகைத்துதான் போகிறார் விற்பனையாளர்
காலத்தில் உறைந்தவள் எப்படி வந்தாளென..


இந்தக்கவிதை  எழுத்தாளர் ச.சுப்பாராவ் அவர்களின் நேயர்விருப்பம் 
எனவே  புகைப்படமும் இட்டு  காலத்தில் உறைந்த  காயத்ரியோடு (திருமதி சுப்பாராவ் ) இந்தக் கவிதையைப்  பகிர்வது மகிழ்ச்சி .



தூண்கள் இல்லாத வீடு

சிலநேரம் வானவில்லுக்காகக் 
காத்துக்கொண்டிருக்கிறோம் 
எப்போதோ பார்த்தது 
பிள்ளைக்குக் காட்டலாமே என்று
மேகமே திரளாவிடில் என் செய்ய

****************************************************************
எவ்வளவோ இலைகள் உதிர்ந்துவிட்டன
இந்த உலகம் தோன்றிய அல்லது 
இலைகள் தோன்றிய நாளிலிருந்து
ஆனாலும்
இதோ இக்கணத்திலும் 
துளிர்த்துக்கொண்டிருப்பதை
நீங்கள் நம்பிக்கை என்கிறீர்கள்
அவர்கள் அறியாமை என்கிறார்கள்
நான் இயற்கை என்கிறேன்
அந்த துளிர் எதுவுமே சொல்வதில்லை


******************************************************************
திரும்பத்திரும்ப சொல்லப்படும் 
விளக்கம் அலுப்பூட்டுகிறது
திரும்பத்திரும்ப கேட்கப்படும்
கேள்வி பதிலை இழக்கிறது
திரும்பத்திரும்ப நடக்கும்
நிகழ்வில் கவர்ச்சி தேய்கிறது
திரும்பத்திரும்ப பகிரும்
செய்தியின் நிறம் மாறுகிறது
அதனாலென்ன
திரும்பத்திரும்ப எல்லாம்
நடக்கத்தான் செய்கிறது


*************************************************************************
சொன்னால் போதும்என்ற 
அழுத்தம் நெருக்கும்போதெல்லாம் 
யாரிடமாவது சொல்லித்தீர்க்கிறீர்கள்
அந்த சொற்களுக்குப் புரிவதேயில்லை
அவற்றை நீங்கள் 

மாத்திரைகளின் அந்தஸ்தில் வைத்திருப்பது
சொல்லிக்கொள்ளவே 

வைக்கப்பட்ட தூண்களும் இல்லாத வீட்டில்
வசிக்கும் காலத்தில் என்னதான் செய்வீர்கள்.


**************************************************************************


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...