புதன், ஏப்ரல் 20, 2016

பிரசங்கிகளின் உலகம்

consumerismகாட்டாமணக்கு மொக்கு கூட
அழகாத்தான் இருக்கிறது படத்தில்
சோடா விளம்பரமல்ல எனத்
தெரிந்தேதான் பார்க்கிறீர்கள்
மோட்சத்தைப் பற்றி கதைத்தபடியே
அவர்கள் கரங்கள் கரன்சிகளை அடுக்குகின்றன
செங்கல்லைத் தின்ன முடியாது தவிக்க நேராமல்
மனை விற்ற மறுநிமிடம்
பிட்சா கிளை திறந்தார்கள்
மெதுவாகச் செல்லும் ரயில்கள்
அடுத்தவனோடு
பேசுமளவு நேரம் தரக்கூடும் என்ற தொல்லையால்
பறக்கின்றன.
முடிந்தால் வாழலாம்.
எது முடிந்தால் என்னாதே அதிகப் பிரசங்கி
இது
பிரசங்கிகளின் உலகம்

செவ்வாய், ஏப்ரல் 19, 2016

தேர்தல் வருகிறது

சட்டகம் தயாராக இருக்கிறது
தகுந்த தலைகளை வரவேற்போம்
இன்றெனின்
தலைகளைத் தட்டி
தக வைப்போம்

**************************************
நாற்காலிகள் அழைக்கின்றன.
இருகாலிகளை நாற்காலிகளாகவே நடத்த
நாற்காலிகள் அழைக்கின்றன.
கும்பிடுகிறார் கூவுகிறார்
கும்பி நிறையா
குப்பன்களைப்பார்த்து
இன்றைய ருசிக்கு எதிர்கால அடுப்பை அடகு
வைத்திட்ட கூட்டத்தின் முன்
உதறுங்கள் பருக்கைகளை
இவரவர்க்கு இவையிவை
நீங்கள் அறியாததா

சனி, ஏப்ரல் 16, 2016

ஏப்ரல் பூ -4

நிலவைக்காட்டுகிறேன்
விரலைப் பார்த்துக்
கொண்டிருக்கிறாய்
***************************************
சிறு பயணம்தான்
இருங்கள்
அந்தக் கருங்குருவியுடன்
போய் வருகிறேன்
சன்னலின் வானத்துக்குள்
மூன்றே விளக்குத்தூண்கள்


வாழையிலை தானே 
காற்றே போதும்
உறையிலிடு வாளை
****************************************
எப்போதாவது 
தெரியட்டும் வெளிச்சம்
இருள் பழகிய கண்கள்
இருப்பதன்
அர்த்தம் சொல்ல
********************************************
உத்தரவு வரும்போது
மட்டுமே
தோட்டாவா கத்தியா
எனத்தெரியும்

அதுவரை புன்னகைத்திரு
இதுவும் சொல்லப்பட்டதே
********************************************

திங்கள், ஏப்ரல் 04, 2016

தித்திக்கும் திங்கள் சேமிக்கும் செவ்வாய்


இன்று அலமாரி குறைந்தவிலையில் 
கிடைப்பதாக வந்த படம் 
சபலம் தந்தது.
பூட்டு மாதிரி ஒன்றையும் 
சாவி மாதிரி ஒன்றையும் வைத்து 
நீண்ட நாட்களாக 
என்னை நானே ஏமாற்றிக்கொள்வதை
மாற்றிவிடலாம் 

முன்னறையின் இருக்கைகள் 
மாற்றப்பட்டால் 
மாலைப்பொழுதுகளின் நிறமே ,
மாறிவிடும் போலிருக்கே 

செம்பாதி விலைக் குறைப்பில் 
காலணிகளும் ,
பாவித்தறியா வாசனைத்திரவியக் குழலும் ..
அளவு...ஒவ்வாமை என எதுவும் 
தடையிராவிடில் ஆளே மாறிவிடலாம் 

மும்பை நட்சத்திரங்கள் 
இவ்வளவு குறைந்தவிலை ஆடைகள்தான் 
உடுத்துகிறார்களா
எனச்  சற்றே வாய் பிளந்துவிட்டேன் போல 
ஒழுகிய எச்சில் நினைவூட்டுகிறது இருப்பை 

கணினித்திரையின் 
சன்னல்கள் ஒவ்வொன்றாய் சார்த்தினேன் 

நாளை என் வீட்டுக்கு 
தளவாடங்களோ ,நகைகளோ 
என்ன கொண்டுவரப்போகிறீர்..

ஏப்ரல் பூ -3

திடீரென பார்வைக்கு வந்து சேரும் சிலுவை
தள்ளிவைத்த கனத்தையெல்லாம்
ஆணியிட்டு இறக்குகிறது
*************************************************************
வலியை மறப்பதா
மறைப்பதா துறப்பதா
தூக்கி எறிவதா
ருசிக்கப்பழகுவதா .
ஒவ்வொரு கேள்விக்கும்
தாளம் போடுவது போல்
ஆடிக்கொண்டிருக்கும்
நெகிழிப்பையை எடுத்தெறிய வேண்டும் முதலில்
*********************************************************
நிர்தாட்சண்யத்தை
சாதனை போல
சொல்லிக்கொள்ளும்
தருணத்துக்கான
அழிப்பான்
எங்கு விற்கப்படுகிறது
***********************************************************
அழுத்தமான நிறங்களை
மட்டுமே கடைவிரிப்பதால்
வானவில்லையே
ரசிப்பதில்லை
என்ற உன் பெருமிதத்தின்
பொருள்
மழுப்பல்களின் வழிபாடா
அந்தப்பெருமிதத்தில்
இடி விழ....

ஏப்ரல் பூ-2

முகங்களைப் பாராதபோது 
ஓடிக்கொண்டிருக்கிறது
ஒரு நதி
காகிதங்களைக்கிழித்து
படகு செய்து விளையாடிக் 
கொண்டிருப்பவன்
ஒருமுறை கூடவா பார்க்கவில்லை
அதில் இருந்த ஓவியங்களை

**************************************************
ஒரு காட்டின் படம்
யானை போலவும்
ஒரு யானையின் படம்
காடு போலவும் புலப்படுகிறது

படம் காட்டும் வாழ்வுதானே
********************************************
ரயிலின் சன்னல்களை
இறுக்கி மூடுபவர்களை
ஏறி அமர்ந்த உடன்
உணவுப்பொட்டலம் பிரித்து
வாழ்வின் கடைசி உணவுபோல திணிப்பவர்களை
அலைபேசி வழி பிரதாபங்களே துணையானவர்களை
இறக்கி விட்டுவிடுங்கள்
அந்தப்பெட்டிகளெங்கும்
குழந்தைகள் ஏறட்டும்
அசையும் கைகளால்
பாதைகளெங்கும் புன்னகை கீற
************************************************

வெள்ளி, ஏப்ரல் 01, 2016

ஏப்ரல் முதல் பூ

மௌனத்தையும் 
உளறலையும் 
ஒரே இலையில் பரிமாறியிருக்கிறாய்
எது பிரதானம்,
எது தொடுகறி புரியாமல்
காத்திருக்கிறது பந்தி


****************************************
கட்டிவந்து இறந்துபோன
அகாலப்பிரிவினால்
நெருக்கமாக மனதிலிருந்த
மூன்றாவது வீட்டு ரமணிமாமா போலவே 
உயர்த்திய புருவமும்
குழைத்த நீறு படிந்த சுருங்கிய நெற்றியுமாய்
ஒருவர் வந்திருக்கிறார்
கட்டிவந்து இறந்தவர் பற்றி
யாரும் சொல்லாமல்
அவரை அனுப்பிவிட்டால் தேவலை


**********************************************************
வேண்டுமென்றுதான்
தள்ளியிருப்பதாகச் சொல்கிறாய்
வேண்டும் என்றால் 
ஏன்...
வேண்டாமென்றால்தானே
தள்ளி வைத்தே
மணம் வீசும் தாழம்பூக்களின் காலமல்லவே

*************************************************
நினைவுகள்
சுற்றிக்கிடக்கின்றன
ஊர்க்குளத்து அல்லிக்கொடி போல
பூவோ
எங்கோ ஒன்றிரண்டுதான்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...