புதன், அக்டோபர் 19, 2016

எங்களிடம் நீர் இருந்தது

எங்கள் கிணறுகளில் நீர் இருந்தது
பத்து வீட்டுக்காரர்கள் வந்து இறைத்தபோதும்
பகிர்வதில் கவலையின்றி இருந்தோம்
எங்கள் குளங்களில் நீர் தளும்பியது
உயர்த்திக்கட்டிய உள்பாவாடையுடன் 
கதையளந்தபடி துணி சவக்காரத்தையே 
இரண்டு இழுப்பு தேய்த்து 
உடைந்த கரையின் சில்லில் 
மஞ்சள் உரசிக்குளியல் முடிப்பதில் 
கூச்சமின்றி நடந்தோம்
பிழிந்த துணி தோளிலும் 
தெருமுனைக்குழாயின் குடம் இடுப்பிலுமாக
நடந்தபோதும்
நனைந்த உடலின் வளைவுகள் 
விரசமாகத் தெரியாத சகமாந்தர்
உடன் நடமாடினோம்
எங்கள் ஆறுகளில் நீரோடியது
கரையோர மரங்களின் பூக்களும்
வறண்டகாலத்தில் விழுந்திருந்த இலைதழையுமாக
புனல் வந்தபோது ஒரு துறையில்
பெருக்கு கொண்டாடினோம்
பிள்ளைகள் மதகிலிருந்து சொருகு நீச்சல்பழக
அப்பன்கள் ஆடுமாடுகளை
வைக்கோல் பிரியோடு தேய்த்துக்கொண்டிருந்தார்கள்
கிணறுகளில் நீரிறைக்க வலுவில்லாது 
பொருத்திய
மோட்டார்கள் பரிதாபமாக முனகும்போது 
விழுந்த நீரிலும் வண்டல்
பிடித்த மனதிலும் அதுவே
மீன்வளர்க்க ஏற்றதாக
குளமும் குட்டையும் மாறியபோது
வீடெங்கும் குளியலறை கட்டுமளவு
முன்னேறிவிட்டோம்
யார் வீட்டு குளியலறையை யாரோ 
எட்டிப்பார்க்கும் நாகரிகத்திலும்
எங்கள் 
ஆறுகளா....
மணல் கிடங்குகளாகி வெகு காலம்
தண்ணீரை அனுப்புவாயா இல்லையா எனத்
தண்டவாளங்களில் விழுந்து கிடக்கிறோம்
விழுந்துதான் கிடக்கிறோம்

படம் .நன்றி sunderarajan 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...