வியாழன், நவம்பர் 23, 2017

வீழ்சருகின் குரல்

தரையோடு படர்ந்து கிடக்கிறது குப்பைக்கீரை
பெயரின் கண்ணாடியில்
முகம் பார்க்கத் தெரியாதவரை
பிழைத்தேன்

********************************************************

வீதிகளற்ற கனவில் 
தினமும் தாவிக்கொண்டிருக்கும் பட்டாம்பூச்சி 
எதிர்ப்படும் கைரேகை பட்டழிகிறது

***********************************************************
புல்லையும் அளவாகக்
கத்தரித்துவிட வேண்டிய
உலகில் 
விடுதலை கீதம்
பாடிச்சுற்றும் பொன்வண்டே
உன் சின்னச்சிறகுகள்
கண்டு பட படக்குதென் இதயம்


***************************************************************
மேல் கீழாக எழுதிப் பார்த்தேன்
கீழ்மேலாகவும்
இடவலம் வல இடம்
எப்படி எழுதிடினும்
குன்றா கசப்பு 
தேனால் மெழுகித்தான் என்ன


************************************************************
விழுதாடிக்கொண்டிருந்த
காற்றைப் பார்த்து சிரித்துக்கொள்கிறது
அடர்கிளை
இங்கோ
அடர்கிளையின் இலை
துறந்த ஒற்றைக்குச்சி


**********************************************************
கழிவிரக்கப் புன்னகைக்குப் பதில்
காறித் துப்பிவிட்டு
சுருண்டது நிழல்


*****************************************************

இந்த நதியின் அலைகளுக்கப்பால்
இந்த முகடுகளின் மேகப்பூச்சுக்கப்பால்
இந்த நீலத்தின்
கூசும் ஒளிக்கப்பால்
இருப்பதெல்லாம் இருள்
ஏன் இத்தனை திரை


********************************************************
இலை இலை இலை
அடுக்கடுக்கடுக்காக
இலை
வளைந்து நெளிந்து
நுழையும் கீற்று அதுபோக்கில்தான் தரை தொடுகிறது
கோணல் புன்னகையென
சலம்புகிறது வீழ்சருகு


**********************************************************
எதுவுமே நினைக்காதவர்கள்
பற்றிக்கூட
என்ன நினைப்பார்களோ என 

நினைத்துக்கொள்கிறீர்கள்


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...