திங்கள், டிசம்பர் 04, 2017

தழையுணர்த்தும் சிறுவாழ்வு

உலுக்கி உலுக்கி ஆட்டியபோதும்
முருங்கைக்கிளை 
சிரித்துக்கொண்டு நிமிர்ந்துவிடுகிறது
பெருமழைசொரிந்த
நேற்றைய சலிப்பெங்கே என்றால்
நம் காலடியில் உதிர்ந்து பறக்கும்
இலைகளைச் சுட்டியபடி
ஓராயிரமாய்க் கிழிந்து தொங்கும் 
வாழையிலையை வருடப்போகிறது

ஏறியிறங்கும் அணிலுக்கும் 
ஒண்டு இடுக்கில் நார் சேர்க்கும் காக்கைக்கும் 
ஆட்சேபமின்றி இடம்

மழையைக்குடிக்கும்
ஒளியைத்தின்னும்
இளவெயிலில் தழையுணர்த்தும்
சிறுவாழ்வு
சொல்லிக்கொள்கிறோம்
எதற்கும் இடந்தரா எம்முடையதைப் 
பெருவாழ்வென்று


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...